முகப்பு
தமிழ்நாடு

"குளமாக மாறிய பள்ளி வகுப்பறை'

திருத்தணி, ஜூலை 24: திருத்தணி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், மாணவர்கள் உட்கார முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாடூர் ஊரா

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:50 PM
பகிர்:

திருத்தணி, ஜூலை 24: திருத்தணி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், மாணவர்கள் உட்கார முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாடூர் ஊராட்சி காலனியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் போதிய கட்டட வசதியில்லாததால் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை ஒரே வகுப்பறையில் உட்கார வைத்து ஆசியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

இக்கட்டடத்தின் மேற்கூரை சீமை ஓடுகளால் ஆனது. இக்கட்டடம் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது கட்டடத்தின் மேற்கூரை ஓடுகள் ஆங்காங்கே உடைந்துள்ளன. மேலும் கடந்த மே மாதம் சூறைக் காற்றுடன் பெய்த பலத்த மழையின் போது பள்ளி அருகில் இருந்த மரம் பள்ளிக் கட்டடத்தின் மீது விழுந்து மேற்கூரை முழுவதும் சேதமடைந்தது.

தற்போது பெய்து வரும் மழையால், பள்ளி வகுப்பறையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளி மாணவர்களை அருகில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழு கட்டடத்தில் அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இப்பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும், பழையக் கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை கிராம சபை கூட்டத்தில் மனு கொடுத்தும் பலன் இல்லை என்கின்றனர்.

  ஊராட்சித் தலைவர் மற்றும் ஒன்றிய நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து தாடூர் காலனியில் இயங்கிவரும் தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் கட்டடத்தை கட்டித் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.