ஜாதிச் சான்றிதழுக்கு அல்லல்படும் பழங்குடி மக்கள்!
ஈரோடு: அரசின் நடைமுறைகள் மிகவும் கடுமையாக உள்ளதால் ஜாதிச் சான்றிதழ் பெறமுடியாமல் பழங்குடியின மக்கள் அவதியடைந்துள்ளனர். தமிழகத்தில், குருமன்ஸ், காட்டு நாயக்கன், இருளர், கோத்தர், ஆதியன், மலைக்குறவன்,
ஈரோடு: அரசின் நடைமுறைகள் மிகவும் கடுமையாக உள்ளதால் ஜாதிச் சான்றிதழ் பெறமுடியாமல் பழங்குடியின மக்கள் அவதியடைந்துள்ளனர்.
தமிழகத்தில், குருமன்ஸ், காட்டு நாயக்கன், இருளர், கோத்தர், ஆதியன்,
மலைக்குறவன், படுகர், தோடர் உள்ளிட்ட 36 ஜாதிகளை சேர்ந்த பழங்குடியின மக்கள் உள்ளனர். இந்த மக்களை மத்திய அரசு அங்கீகரித்து
Advertisement
பழங்குடியினர் பட்டியலில் இணைத்துள்ளது. இவர்களுக்கான இடஒதுக்கீட்டையும் மாநில விகிதாச்சாரத்திற்கு ஏற்ப உறுதி செய்துள்ளது. தமிழக அரசு இவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒரு சதம் இடஒதுக்கீடு அளித்துள்ளது.
அரசு வேலைவாய்ப்பில் பழங்குடியினருக்கு என்று ஒதுக்கப்பட்ட பல்வேறு
துறைகளில் அதற்கான ஆட்கள் தேர்வு செய்யப்படாமலும், உயர் பதவிகளுக்கு உயர்த்தாமலும் பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பப்படாமல்
காலியிடங்களாக பல நூறு பதவிகள் உள்ளன. அரசுப் பணியில் சேரும் அளவிற்கு போதிய அளவு கல்வித்தகுதி இருந்தாலும், அரசு அறிவித்துள்ள பட்டியலில் உள்ள லட்சக்கணக்கான பழங்குடியின மக்கள் தங்களது இனம் இதுதான் என்று உறுதி செய்தாலும், இதற்குரிய சான்றிதழ் பெற முடியாமல் போவதால் அரசுப் பணிகளில் வாய்ப்பு கைநழுவிப் போகிறது.
பிற வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்குவதில் உள்ள
எளிமையான நடைமுறைகள், பழங்குடியினத்தை சார்ந்த மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்குவதில் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது. பழங்குடி மக்களுக்கு ஓரளவு கல்வி விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கிய பிறகே, தங்கள் சந்ததியினரை படிக்கவைக்க வேண்டும் என்று கருதினர். உயர் கல்விக்கும், அரசு வேலைக்கும் ஜாதிச் சான்றிதழ் கட்டாயத் தேவை என்பதால் கடந்த 10 ஆண்டுகளாகவே இதற்காக பழங்குடி மக்கள் போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
மூதாதையர்களுடைய சான்றிதழ்கள், பத்திரங்கள் போன்ற அரசு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஜாதிச் சான்றிதழ் கோரும் பழங்குடியின மக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை இன்றும் பல இடங்களில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் பல கிராமங்களில் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட
உள்ளாட்சிப் பதவிகளில் கூட சான்றிதழ் இல்லாத காரணத்தால் போட்டியிட முடியாத நிலை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாடு சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும் பழங்குடியின மக்களுக்கான உரிமைகள் ஓரளவு கூட கிடைக்கவில்லை. இதனால்தான் இந்த மக்களை சில தீவிரவாத இயக்கங்கள் தங்கள் வசப்படுத்தியுள்ளன என்று சமூக ஆர்வலர்கள் பலரும் மத்திய, மாநில அரசுகள் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.
பழங்குடியின மக்கள் சுயமாக சிந்திக்கவும், பொருளாதார நிலையில் ஓரளவாவது வளர்ச்சி பெறவும் கல்வி மிகவும் அவசியம். இந்தக் கல்வியைப் பெற மிகவும் அடிப்படையாக உள்ள ஜாதிச் சான்றிதழை, பழங்குடி மக்கள் எளிதில் பெறும் வகையில் இதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்பதே இப்போதுள்ள தேவை.