அடிப்படை வசதிகள் அறவே இல்லா அரசு மேல்நிலைப்பள்ளி
செஞ்சி, ஜூன் 20: செஞ்சி வட்டம் நல்லாண்பிள்ளைபெற்றாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. இதனால் இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் அளவற்ற து
செஞ்சி, ஜூன் 20: செஞ்சி வட்டம் நல்லாண்பிள்ளைபெற்றாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. இதனால் இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் அளவற்ற துயரத்துக்கு தினம் தினம் ஆளாகி வருகின்றனர்.
÷நல்லாண்பிள்ளைபெற்றாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 650 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் பிரதான நுழைவு வாயில் முட்புதர்கள் நிறைந்து, குப்பைக் கூளங்கள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால் காட்டுக்குள் செல்வதுபோல் நடந்து சென்றே பள்ளியை அடைய முடியும். கழிப்பிடம் இருந்தும் அது பயன்படுத்த முடியாத அளவுக்கு சீர்கெட்டுள்ளது. மேலும் அங்கு தண்ணீர் வசதி இல்லாததால் மாணவிகள் உள்பட அனைவரும் வயல் வெளிகளையே கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
÷குடிநீர் மேல்நிலைத் நீர் தேக்கத் தொட்டி பெயரளவில் உள்ளது. அதில் குடிநீர் நிரப்பவோ, விநியோகிக்கவோ வசதி இல்லை. இதனால் தண்ணீருக்காக அருகில் இருக்கும் கிணறுகளில் ஆபத்தை உணராமல் நீர் எடுக்க சில மாணவர்கள் செல்கின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறு பழுதாகி முட்கள் சூழ்ந்துள்ளது.
22 ஆண்டுகளாக இப்பள்ளிக்கென துப்புரவுப் பணியாளர் இல்லை. அலுவலக உதவியாளர் இல்லை. சுற்றுச்சுவர் இல்லை. இரவுக் காவலரும் இல்லை.
÷அடிப்படை வசதிகள் குறித்து குறைந்தபட்ச விழிப்புணர்வு கூட இல்லாத நிலையில் மாணவ, மாணவிகள் உள்ளனர்.
÷இப்பள்ளியின் அவலநிலை குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்ட போது "பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை கல்வித்துறைக்கு நாங்கள் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை' என்று கூறினார்.
÷எனவே மாவட்ட நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து மாணவ, மாணவியரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் கல்வியை அளிக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.