முகப்பு
தமிழ்நாடு

திருத்தணியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: அரக்கோணம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கைகொடுக்குமா?

திருத்தணி அடுத்துள்ள அருங்குளம் கிராமத்தில் 1967-ம் ஆண்டு கட்டப்பட்ட தலைமை நீரேற்றும் நிலையம். திருத்தணி, மார்ச் 26: திருத்தணியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரக்கோணம் கூட்டு குடிநீர் திட்டம் கை கொட

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:14 PM
பகிர்:
திருத்தணி அடுத்துள்ள அருங்குளம் கிராமத்தில் 1967-ம் ஆண்டு கட்டப்பட்ட

தலைமை நீரேற்றும் நிலையம்.


திருத்தணி, மார்ச் 26: திருத்தணியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரக்கோணம் கூட்டு குடிநீர் திட்டம் கை கொடுக்குமா என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.

திருத்தணி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். திருத்தணியைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து தினசரி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது அத்தியாவசியப் பணிகள் காரணமாக திருத்தணிக்கு வந்து செல்கின்றனர். மேலும் ஆறுபடை வீடுகளில் ஒன்றான முருகன் கோயில் இங்கு உள்ளதால் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் காரணமாகவும் திருத்தணியில் பொதுமக்களின் வருகை அதிகரித்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. தற்போது கிணறு, குளம், ஏரி, ஆறு மற்றும் நீர்நிலைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் திருத்தணியைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. திருத்தணியில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னரே குடிநீர் பஞ்சம் நிலவி வந்தது. அன்றைய பஞ்சாயத்து தலைவர் கோல்டன் ந. சுப்பிரமணியத்தின் தீவிர முயற்சியால் திருத்தணியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள அருங்குளம் கிராமத்தில் குசஸ்தலை ஆற்றில் கிணறு அமைத்து மோட்டார் மூலம் திருத்தணிக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டது. நகராட்சியின் முன் பகுதியில் குடிநீர் குழாய் அமைத்து அப்போதைய தமிழக முதல்வர் அண்ணாதுரை அவர்களால் குடிநீர் விநியோகம் தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் 1996- 2001-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் குடிநீர் தேவைக்காக திட்டமிடப்பட்டு அப்போதைய பேரூராட்சி தலைவராக இருந்த எஸ்.சந்திரன், எம்.எல்.ஏ. சிவாஜி ஆகியோரின் முயற்சியால் அருங்குளம் ஆற்றில் 5 ஆழ்துளை கிணறுகள் அமைக்க ரூ.4 கோடியே 10 லட்சம் செலவில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன.

ஆனால் மண் பரிசோதனை, நீர் வள ஆதாரங்கள் முறையாக இல்லாததால் திட்டமிட்டப்படி போதுமான தண்ணீர் கிணறுகளில் கிடைக்காமல் போனது. இதைத் தொடர்ந்து குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க கடந்த 2001- 2006-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.5 கோடியே 83 லட்சம் செலவில் கூட்டு குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி திருப்பாற்கடலில் இருந்து அரக்கோணம் கூட்டு குடிநீர்த் திட்டம் மூலம் திருத்தணிக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்க நிதி ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் உள்ளன. இருந்தும், கோடைக் காலம் தொடங்கிவிட்டதால் இந்த திட்டம் எப்போது மக்களிடையே சென்று சேரும், குடிநீர் பிரச்னை எப்போது தீரும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் திருத்தணியில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க நகராட்சி நிர்வாகம் பல்வேறு நிலைகளில் முயற்சி எடுத்து வருகிறது. வேலஞ்சேரி, காசிநாதபுரம், டி.வி. புரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் கொள்முதல் செய்து மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே தெருக்குழாய்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் பற்றாக்குறையால் தற்போது டிராக்டர், லாரிகள், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் தண்ணீர் விற்பனை செய்து வருகின்றனர். கால ஓட்டத்தாலும், பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்தாலும் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது. இருந்த போதிலும் அரக்கோணம் கூட்டு குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவேறினால் மட்டுமே திருத்தணிக்கு நிரந்தரமாக குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். அரசு செய்யுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.