முகப்பு
தமிழ்நாடு

மறைந்து வரும் மரபுகள்!

பெரியவர்களின் அரிய முயற்சியால் உருவாகியிருக்கும் கலை வடிவங்களை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்களின் தன்னலமற்ற தியாகத்தை நாம் என்றாவது எண்ணிப் பார்க்கிறோமா? எல்லாக் கலைகளையும் பொழுது போக

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:48 PM
பகிர்:

பெரியவர்களின் அரிய முயற்சியால் உருவாகியிருக்கும் கலை வடிவங்களை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்களின் தன்னலமற்ற தியாகத்தை நாம் என்றாவது எண்ணிப் பார்க்கிறோமா?

எல்லாக் கலைகளையும் பொழுது போக்குக்கான வடிவமாகவே நாம் பார்க்கமுடியாது. கலைக்கு, பொழுது போக்கைத் தாண்டி மனிதனை இறைவனோடு ஒன்றவைக்கும் பொறுப்பும் இருக்கிறது. அத்தகைய பொறுப்பை தற்போது இருக்கும் கலை வடிவங்கள் உண்டாக்குகிறதா?

எந்தக் கலை வடிவத்திற்கும் ஒரு பாரம்பர்யப் பெருமை உண்டு. அந்த வடிவத்தை "புதுமை' என்னும் பெயரால் மாற்றுவதால், அதன் உண்மைத் தன்மை பாதிப்படைந்துவிடும். பாரம்பர்யக் கலை வடிவங்களை ஆவணப்படுத்துவதை நாங்கள் முக்கியமானதாகக் கருதுகிறோம். நீங்கள்?

இப்படித் தொடங்குகிறது தபஸ்யா கலா சம்பிரதாயா (tap asy aks.in) என்னும் அமைப்பின் இணையத் தளம். பாரம்பர்யமான பரதக் கலையில் இசை வேளாளர்களின் பங்களிப்பு குறித்தும், இந்தக் கலையை வளர்த்த பல பரம்பரையினரின் பாணிகளையும் பற்றி "மறைந்துவரும் மரபுகள்' என்னும் ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார் இந்த அமைப்பின் இயக்குனரும், தஞ்சை நால்வர் வழியில் வந்த கிட்டப்பா பிள்ளையின் மாணவியுமான இந்து வர்மா. ஆவணப்படத்தின் அவசியம் குறித்தும் அதில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் கலை வடிவங்களின், பெரியவர்களின் பெருமைகள் குறித்தும் அவர் நம்மிடம் பேசியதிலிருந்து...

""நாங்கள் எடுத்த "மறைந்துவரும் மரபுகள்' ஆவணப்படத்தில் பேசிய பல பெரியவர்கள், நாங்கள் அதை 2003-ஆம் ஆண்டில் வெளியிடும் போது உயிரோடு இல்லை. தஞ்சை நால்வர் வழியில் வந்த கிட்டப்பா பிள்ளை, கே.பி.சிவானந்தம் பிள்ளை, சுப்பராயப் பிள்ளை, டி.விஸ்வநாதன், ஸ்ரீமதி முக்தா, லஷ்மி நைட் போன்றோர் இன்று நம்மிடம் இல்லை.

புதுக்கோட்டை பரம்பரை, கொண்டி பரம்பரை, பந்தநல்லூர் பரம்பரை என்று ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருந்திருக்கின்றது. அந்தந்தப் பரம்பரையினரின் நாட்டிய பாணிகளைப் பற்றி அந்தந்த பரம்பரையைச் சேர்ந்தவர்களைக் கொண்டே இந்த ஆவணப்படத்தில் பேசவைத்திருக்கிறோம்.

புதுமை என்ற பெயரால் பரதநாட்டியத்தில் பல மாற்றங்களை இன்றைக்கு செய்துவருகின்றனர் பலர். இதனால் எதிர்வரும் காலத்தில் பரதநாட்டியத்தின் உண்மையான வடிவமும், நமக்கு முன்பு இந்தத் துறையில் இருந்த பெரியவர்கள் இந்தக் கலையை எப்படிப் பயன்படுத்தினார்கள்? என்ற விவரங்களும் தெரியாமலே போகும் வாய்ப்பு இருக்கிறது.

அதனால், உண்மையிலேயே கலையில் ஆர்வம் இருப்பவர்களுக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் பெரியவர்கள் நமக்கு வழங்கிய கலைப் பொக்கிஷத்தை, அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டே ஆவணப்படுத்தியிருக்கிறோம்.

இந்த வகையில் கொண்டி பரம்பரையில் வந்த பத்மஸ்ரீ பி.ஆர்.திலகத்தைக் கொண்டு அவர்களின் பாட்டி, "சிம்மநந்தனம் புகழ்' கமலாம்பாள் அவர்களால் ஆடப்பட்ட தியாகேசர் குறவஞ்சி, பல்லக்கி சேவா பிரபந்தம் போன்ற பழங்கால நாட்டிய நாடகங்களை எங்களின் மாணவர்களைக் கொண்டு நிகழ்த்துகிறோம்.

அந்தக் கலையை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

தஞ்சை நால்வர்களால் இசையமைக்கப்பட்ட சரபேந்திர பூபாலக் குறவஞ்சியையும் பந்தநல்லூர் எம்.கோபாலகிருஷ்ணனைப் பாடவைத்து தற்போது நாட்டிய நாடகமாக தஞ்சையில் பல கோயில்களில் நடத்தி வருகிறோம்.

கே.பி.சிவானந்தத்தின் மகனான சின்னைய்யா சிவக்குமாரின் "தஞ்சை நால்வர் குருகுலம்' மூலமாக அவர்களின் பரம்பரையில் பனையோலைகளில் எழுதப்பட்டிருக்கும் பல இசை நாட்டியம் சார்ந்த குறிப்புகளை புத்தகமாகவும், நாட்டிய நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தி வருகிறோம்.

ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் பல்கலைக்கழகத்திலிருந்தும், ஐரோப்பாவின் பல புகழ்பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்தும் இசை, நாட்டியம் குறித்து ஆராய்ச்சி செய்பவர்கள் இந்தப் பாரம்பர்யத்தின் பெருமைகளைக் கேட்டுச் செல்கின்றனர். பரதக் கலையின் உன்னதத்தைத் தெரிந்து கொள்வதற்காக உலகின் எந்த மூலையிலிருந்து வரும் சாமான்யர் முதல் ஆய்வு செய்பவர் வரை எவருக்கும் இந்தக் கலையின் சிறப்புகளைச் சொல்வதற்கும் எங்களின் இந்த ஆவணப்படத்தை திரையிடுவதற்கும் தயாராக இருக்கிறோம்.

எதிர்காலத்தில் பரதநாட்டியம் என்றில்லை, பாரம்பர்யமாக நடத்தப்பட்டு வரும் எந்தக் கலை வடிவத்தையும், அதன் வேர்களைத் தாங்கும் விழுதுகளாக இன்றைக்கும் அந்தக் கலையைக் காப்பாற்றிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி ஆவணப்படுத்தி, அவர்களின் கலையைக் காப்பாற்றி, பொருளாதார ரீதியாக அவர்களுக்கு உதவும் எண்ணத்தில் இருக்கிறோம்'' என்றார் இந்து வர்மா.

முழு கட்டுரையைப் படிக்க →