சொற்ப வருவாயில் ஆவின் ஓய்வூதியர்கள்!
வேலூர் : அரசு ஊழியர்களைப் போலவே பணியாற்றி ஓய்வு பெற்றாலும், சொற்ப தொகையாகக் கிடைக்கும் ஓய்வூதியத்தில் வாழ்க்கை நடத்த மிகுந்த சிரமப்படுகின்றனர் ஆவின் ஓய்வூதியர்கள். தமிழகத்தில் 1972-ம் ஆண்டில், தமிழ்ந
வேலூர் : அரசு ஊழியர்களைப் போலவே பணியாற்றி ஓய்வு பெற்றாலும், சொற்ப தொகையாகக் கிடைக்கும் ஓய்வூதியத்தில் வாழ்க்கை நடத்த மிகுந்த சிரமப்படுகின்றனர் ஆவின் ஓய்வூதியர்கள்.
தமிழகத்தில் 1972-ம் ஆண்டில், தமிழ்நாடு பால் வள வாரியம் (ஆவின்) தொடங்கப்பட்டு, பால் விநியோகத்தில் சுமார் 600 கூட்டுறவு சங்கங்கள் ஈடுபட்டு வந்தன. பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் இந்த ஆவின் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. தேசிய பால் வள வாரியம் மூலம் நிதியுதவி பெற்று செயல்பட்டு வந்தது.
இந்த அமைப்பே பின்னர் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என மாறியது. இந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் தற்போது 17 மாவட்டங்களில் கூட்டுறவு ஒன்றியங்கள் இயங்கி வருகின்றன. மேலும் கிராமங்கள் தோறும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் ஏற்பட்டுத்தப்படுகின்றன.
Advertisement
தமிழ்நாடு பால் வள நிறுவனத்தில் தொடக்க காலம் முதலே நியமிக்கப்பட்ட பணியாளர்கள், அலுவலர்கள், கால்நடை மருத்துவர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோருக்கு, அரசு ஊழியர்களைப் போலவே ஊதியம், இதர சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும், பல அரசுத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்களும் அயல்பணி முறையில் பணியாற்றி வருகின்றனர். இதில் தற்போது 10 ஆயிரம் ஊழியர்கள் வரை பணியாற்றுகின்றனர்.
இதில் பணியாற்றி வந்த பலர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே ஓய்வு பெற்றுவிட்டனர். ஆனால் இவர்களுக்கு அப்போதிருந்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலமே மிக சொற்ப நிதி ஓய்வூதியமாக வழங்கப்பட்டுவருகிறது. இதில் குறைந்தபட்சம் | 500 முதல் அதிகபட்சமாக | 1,500 வரையே ஓய்வூதியம் கிடைக்கிறது.
மேலும் இவர்களுக்கு, அரசு ஊழியர்களைப் போல முழு ஓய்வூதியமோ, ஸ்டார் காப்பீட்டுத் திட்டமோ கிடையாது. இதனால், தங்களது ஓய்வு காலத்தில் உரிய வருவாய் இன்றி, மிகுந்த அவதிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
கிராமப்புறங்களில் வேளாண்மைக்கு அடுத்த உப தொழிலாக இருக்கும் பால் உற்பத்தி மூலம், நகர்ப் பகுதியிலிருந்த பொருளாதாரத்தை, கிராமத்தை நோக்கிக் கொண்டு சென்ற பணியைச் செய்தது இந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம். ஆனால், இதில் பணியாற்றி ஓய்வு பெற்ற 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது.
இதுகுறித்து ஆவின் ஓய்வூதியர்கள் நலச்சங்கச் செயலர் டி.உமாபதி கூறியது:
ஆவின் பணியாளருக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இது அரசின் முடிவு எனக் கூறிவிட்டார். இதுதொடர்பாக, தமிழக முதல்வரிடம் நேரிலும், தபால் மூலமும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதுவரை பதில் ஏதும் இல்லை.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள் தற்போது | 500 முதல் | 600 வரை ஓய்வூதியம் பெறுகின்றனர். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற எனக்கு தற்போது | 1,100 ஓய்வூதியமே கிடைக்கிறது. இது வாழ்க்கையை நடத்த போதுமானதாக இல்லை.
அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் கூட எங்களைவிட அதிகமாக இருக்கிறது. போக்குவரத்துக்கழக, மின்வாரிய ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படுவதைப்போல, ஆவின் ஓய்வூதியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றார்.