வடகவுஞ்சி கிராமத்துக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்குமா?
கொடைக்கானல் : கொடைக்கானலில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவு உள்ளது வடகவுஞ்சி கிராமம். இதில் பெரும்பள்ளம், செம்பராங்குளம், அசன்ஓடை, அஞ்சுரான்மந்தை, பொய்யாவழி, டபுள்கட்டிங், தச்சலூர், கீழ்
கொடைக்கானல் : கொடைக்கானலில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவு உள்ளது வடகவுஞ்சி கிராமம். இதில் பெரும்பள்ளம், செம்பராங்குளம், அசன்ஓடை, அஞ்சுரான்மந்தை, பொய்யாவழி, டபுள்கட்டிங், தச்சலூர், கீழ்வயல், மேல்வயல், பட்டியக்காடு, பாறையாறு, கத்திரிஓடை, நாஞ்சாறு உள்ளிட்ட 15 கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 6 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.
இந்தப் பகுதியில் வாழை, ஆரஞ்சு, காபி, உருளை, பீன்ஸ், காரட் போன்ற பணப் பயிர்கள் விளைகின்றன. இந்தப் பகுதி மக்களின் முக்கியத் தொழில் விவசாயம்.
இந்தக் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியும் உள்ளது.
இங்கு சாலைகள் அமைக்காததாலும், வடகவுஞ்சியிலிருந்து நாஞ்சியாறுப் பகுதியிலுள்ள பாலம் சேதமடைந்துள்ளதாலும் மழைக் காலங்களில் அதிக அளவு தண்ணீர் வருவதாலும் வேறு வழியின்றி பெரும்பள்ளம், செம்பராங்குளம், அசன்ஓடை, நாட்டாறுபட்டி, அஞ்சுரான்மந்தை போன்ற கிராம மக்கள் இந்தப் பாலத்தின் வழியே வந்து செல்கின்றனர். இதனால், கிராம மக்கள் விவசாயப் பொருள்களைக் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.
இந்தப் பகுதியில் 100 நாள் வேலை திட்டம் சார்பில் 3 கி.மீ. தொலைவில் சாலை அமைக்கும் பணி 6 மாதங்களுக்கு முன் தொடங்கியது. ஆனால், வேலை நடைபெறும் கிராமச் சாலைகளை அந்தப் பகுதியில் உள்ள நிலங்களை தனியார்
ஆக்கிரமித்துள்ளதால், அப் பகுதியில் சாலை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இந்தப் பகுதியில் மண் சரிவு ஏற்படுகிறது. இங்கு வாரத்துக்கு 2 நாள் மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது.
பள்ளி மாணவ, மாணவியர் விளையாடுவதற்கு சுமார் 35 சென்ட் இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. ஆனால் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு போதிய பண வசதியில்லாததால் பாதியிலேயே நின்றுவிட்டது. இதனால் பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டு உபகரணங்கள் பயனற்ற நிலையில் உள்ளன.
இப் பகுதியில் முள்புதர்கள் நிறைந்து சுகாதாரமின்றி கிடக்கின்றன. கடந்த 3 மாதங்களுக்கு முன் வடகவுஞ்சியில் உள்ள நூலகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். அதன்பின் அந்த நூலகம் செயல்படவேயில்லை. போதுமான புத்தகங்களும் இல்லை. நூலகத்தில் பணியாளர் வராததால் பூட்டியே கிடக்கிறது.
இதுகுறித்து கிராமச் செயலர் நம்பிராஜன் கூறியது:
வடகவுஞ்சி கிராமத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை. எந்தத் திட்டங்களும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. இந்தப் பகுதிகளிலுள்ள அரசு நிலங்களை தனியார் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்த முடிவதில்லை. மின்வசதி, சாலை, கழிப்பறை, போக்குவரத்து வசதி இல்லை. இதனால் விவசாய மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர்.
வடகவுஞ்சி கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து வடகவுஞ்சி ஊராட்சிமன்றத் தலைவர் பகவதி கரியமால் கூறியது:
தற்போது இக்கிராமத்தில் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் 21 வீடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் செலவில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் செலவில், பல கிராமங்களுக்கு மண் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பல வேலைகள் நடைபெறுகின்றன. வடகவுஞ்சிக்கு வரும் மின் இணைப்புகள் வனப் பகுதிகள் வழியே வருவதால், அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
கிராமப் பகுதிகளிலுள்ள நிலங்களை தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், அரசுத் திட்டப் பணிகள் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. பெரும்பள்ளம் செல்லக் கூடிய பாலத்தை அகலப்படுத்த வேண்டும்.
பல்வேறு பிரச்னைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.