முகப்பு
தமிழ்நாடு

ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் அகழி சீரமைக்கப்படுமா?

நீடாமங்கலம் : திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஸ்ரீ ஆபத்சகாயேசுவரர் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள அகழியைச் சீரமைத்து, பராமரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பக்தர்கள் எதிர்பா

Updated On : 20 செப்டம்பர், 2012 at 11:00 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 10:56 PM

நீடாமங்கலம் : திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஸ்ரீ ஆபத்சகாயேசுவரர் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள அகழியைச் சீரமைத்து, பராமரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

   ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேசுவரர் கோயில் நவக்கிரகங்களில்  குரு பகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற சிறப்புடைய இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மகா குரு வார தரிசன விழா சிறப்பாக நடத்தப்படுகிறது.

  மேலும், குருப் பெயர்ச்சி விழாவும் விமரிசையாக நடைபெறுகிறது. குருபெயர்ச்சி விழாவில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான  பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து, குரு பகவானை தரிசித்துச் செல்கின்றனர்.

Advertisement

   மேலும், வார நாள்களில் குருவுக்கு உகந்த நாளான வியாழக்கிழமைகளிலும், பிற அரசு விடுமுறை நாள்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக் கோயிலுக்கு வருகை தருகின்றனர்.   இவ்வாறு வரும் பக்தர்கள் அருகிலுள்ள பெரிய நகரங்களில் வாடகைக்கு அறைக்கு எடுத்து தங்கி, பின்னர் இத் திருக்கோயிலுக்கு வந்து  சுவாமி தரிசனம் செய்து செல்ல வேண்டிய நிலையே தற்போது உள்ளது.

  இவ்வாறு வெளியிலிருந்து வரக்கூடிய பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் அறைகள் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை திருக்கோயில் நிரவாகத்தினரின் கவனத்தில் உள்ளது.

   ஆயினும், திருக்கோயிலைச் சுற்றிலும் மாலை அணிவித்தாற் போல அமைந்துள்ள அகழியில், ஆறுகளில் நீர் வரும் காலத்தில் பாசனத்திற்கு போக எஞ்சிய நீர் மட்டுமே விடப்படுகிறது. அகழிக்கு நீர் வரத்திற்கான வழி மட்டுமே உள்ளது, வடிகால் வசதி கிடையாது.

  அதனால், அகழியைச் சீரமைத்து எப்போதும் அகழியில் நீர் இருக்கும் வகையிலும், பக்தர்கள் புனித நீராடி குரு பகவானை தரிசிக்கவும் ஏற்ற வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி மூலம்  16 லட்சத்திலும், திருக்கோயில் நிதி  22 லட்சத்தின் மூலமும் அகழியின் ஒரு பகுதியில் தடுப்புச் சுவர் ஏற்கெனவே கட்டப்பட்டது.

   எஞ்சிய பகுதிகளில் தடுப்புச் சுவர் கட்டப்படாமல் உள்ளது. எஞ்சிய பணிகளையும் நிறைவேற்றிடவும், பக்தர்கள் குளிப்பதற்கு ஏற்ற வகையில் கூடுதல் படித்துறைகளை கட்டடவும், தமிழக சுற்றுலாத் துறையின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து, அகழியை மேலும் தூய்மைப்படுத்தி பக்தர்கள் புனித நீராடும் வகையிலும், எக்காலத்திலும் அகழியில் நீர் இருக்கும் வகையிலும் சிறப்பு வசதிகளைச் செய்ய வேண்டும் என்பதும் பக்தர்களின் எதிர்ப்பார்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.