இபிஎஸ்ஸின் பிரசாரம் ஒத்திவைப்பு! பிரதமருடன் இன்று சாலை வலம்!
நாகர்கோவிலில் இன்று பிரதமர் நரேந்திர மோடியின் சாலை வல நிகழ்ச்சி.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியுடன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று(ஏப். 15) மாலை சாலை வல நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
இதனால், எடப்பாடி பழனிசாமி கரூர் மற்றும் திருப்பூரில் இன்று பங்கேற்கவிருந்த பிரசாரம் மற்றொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகிறார்.
Advertisement
தில்லியிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 4 மணிக்கு நாகர்கோவில் ஆயுதப்படை திடலுக்கு வருகிறார்.
அங்கிருந்து, நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்புக்கு காரில் வரும் பிரதமர், வேப்பமூடு சந்திப்பிலிருந்து வடசேரி எம்.ஜி.ஆர். சிலை வரை ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு சாலை வலமாகச் சென்று கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவா் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.