இலவச வேஷ்டி-சேலை: ஜனவரியில் 40 சதவீத பயனாளிகளுக்கு கிடைக்கும்
சென்னை, டிச.28: இலவச வேஷ்டி-சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், ஜனவரியில் 40 சதவீத பயனாளிகளுக்கு வேட்டி-சேலைகள் அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்பின் பிப்ரவரி-மார்ச் மாதங்களுக்குள் 30 சதவீ
சென்னை, டிச.28: இலவச வேஷ்டி-சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், ஜனவரியில் 40 சதவீத பயனாளிகளுக்கு வேட்டி-சேலைகள் அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன்பின் பிப்ரவரி-மார்ச் மாதங்களுக்குள் 30 சதவீதம் அளவுக்கும், தமிழ் புத்தாண்டுக்குள் அந்தப் பணிகளை முடிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, இலவச வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு 1.70 கோடி பேருக்கு வேட்டிகளும், 1.69 கோடி பேருக்கு சேலைகளும் அளிக்கப்பட உள்ளது.
தாமதம் ஏன் ? டிசம்பர் மாத இறுதியிலோ அல்லது ஜனவரி மாத முதல் வாரத்திலோ அதற்கானப் பணிகள் முடிக்கப்பட்டு, வருவாய்த் துறையிடம் இலவச வேட்டி-சேலைகள் ஒப்படைக்கப்படும். அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுவிடும். ஆனால் இந்த ஆண்டு சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளதாகப் பல்வேறு தரப்பினரும் புகார்கள் கூறி வருகின்றனர்.
மேலும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த நெசவாளர்களிடம் இலவச வேட்டி-சேலை தயாரிக்கும் பணிகள் ஒப்படைக்கப்படுவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. இதனை தமிழக அரசு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தல், அதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தக் காலங்களில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் இருந்தன. தேர்தல்கள் முடிந்த பிறகு இலவச வேட்டி-சேலை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் கோ-ஆப்டெக்ஸ் உள்ளிட்ட இடங்களில் நிர்வாக ரீதியாக சில பிரச்னைகள் எழுந்தன. அவை சீர்படுத்தப்பட்டு இப்போது பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகக் கைத்தறித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
40 சதவீதம் வழங்கப்படும்: தகுதியுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு மட்டுமே கூட்டுறவு சங்கங்களில் இருந்து நூல்கள் வழங்கப்பட்டன. அவை தகுதியானவையா என்பது குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட நெசவுக்கூடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இலவச வேட்டி-சேலைகள் ஒவ்வொன்றுக்கும் பிரத்யேக எண் அளிக்கப்படும். இதன்மூலம் போலிகளாகத் தயாரித்த வேட்டி-சேலைகளை இடையில் கலக்க முடியாது. கடும் கட்டுப்பாடுகளுடன் இலவச வேட்டி-சேலைகள் தயாராகி வருகின்றன. ஜனவரி 10-ம் தேதிக்குள் 30 சதவீதம் அளவுக்கு பணிகள் முடிக்கப்பட்டு, பொங்கல் பண்டிகை தொடங்கும் நேரத்தில் வழங்கப்படும். ஜனவரிக்குள் 40 சதவீதப் பயனாளிகளுக்கு இலவச வேட்டி-சேலைகள் அளிக்கப்பட்டுவிடும். தமிழ்ப் புத்தாண்டுக்குள் பயனாளிகளுக்கு முழுமையான அளவில் வழங்கப்படும் என தலைமைச்செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கிக் கணக்கில்...
இலவச வேட்டி-சேலையைத் தயார் செய்யும் கைத்தறி நெசவாளர்களுக்கான கூலி அவர்களின் வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்படும் என அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இலவச வேட்டி-சேலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கான கூலி நெசவாளர்களிடம் நேரடியாகக் கொடுக்கப்படாது. அவர்களுக்கென "இருப்பு வைக்க வேண்டிய அவசியமில்லாத வகையான வங்கிக் கணக்கு' தொடங்கப்பட்டு அதில் வரவு வைக்கப்படும். மேலும் நெசவாளர்களை ஊக்கப்படுத்த அவர்களின் பணித்திறனுக்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.