பூட்டியே கிடக்கும் துணை சுகாதார நிலையம்
ஸ்ரீபெரும்புதூர், பிப். 9: செங்காடு ஊராட்சியில் பூட்டியே கிடக்கும் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து மீண்டும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர், பிப். 9: செங்காடு ஊராட்சியில் பூட்டியே கிடக்கும் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து மீண்டும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் பண்ருட்டி, வல்லம், மதுரமங்கலம் ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அதிக தொலைவில் இருந்து மக்கள் சிகிச்சைக்கு வர சிரமம் ஏற்பட்டு வந்ததால் 5000 மக்கள் தொகைக்கு ஒரு துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. அதன்படி வல்லம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் வல்லம், பென்னலூர், போந்தூர், பிள்ளைப்பாக்கம், வளர்புரம் ஆகிய பகுதிகளில் துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதுதவிர பண்ருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் பண்ருட்டி, மாத்தூர், மேல்மதுரமங்கலம், சேந்தமங்கலம், குண்ணம் ஆகிய பகுதிகளிலும் ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் மதுரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் 11 துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மொத்தம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 21 ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள் உள்ளன.
இதில் செங்காடு பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையமும் ஒன்று. இந்த துணை சுகாதார நிலையத்தில் செவிலியர் ஒருவர் பணியில் இருப்பர். அவர் பொதுமக்களுக்கு ஏற்படும் சாதாரண காய்ச்சலுக்கும், கர்ப்பிணிகளுக்கு ஆலோசனைகளும் வழங்குவார்.
மேலும் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்ப்பதற்காகவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் மேற்கூறப்பட்ட துணை சுகாதார நிலையங்கள் பழமையான சேதமடைந்த கட்டடங்களில் இயங்குவதால் கிராம சுகாதார செவிலியர்களால் தங்கள் பணிகளை துணை சுகாதார மையங்களில் செய்ய முடியாமல் உள்ளனர்.
இதனால் சுகாதார செவிலியர்கள் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வந்து செல்கின்றனர். இதனால் துணை சுகாதார நிலையங்கள் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிகள் அதிக தொலைவு உள்ள வல்லம், பண்ருட்டி, மதுரமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்லவும், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று வரவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்தக் காரணங்களுக்காகவே செங்காடு பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையமும் பூட்டியே கிடக்கிறது. இதனால் செங்காடு பகுதியில் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை அப்பகுதி மக்கள் ஆக்கிரமிப்பு செய்து தங்கள் வாகனங்களை நிறுத்தும் இடமாக தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் இந்த துணை சுகாதார மைய கதவு மட்டுமே பூட்டப்பட்டுள்ளது. ஆனால் ஜன்னல்கள் திறந்து கிடக்கின்றன. இதனால் ஜன்னல் அருகில் வைக்கப்பட்டுள்ள அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் கருவிகள் தெரியும் அளவிற்கு உள்ளன.
இதனால் இப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் இந்த அறுவை சிகிச்சை கருவிகளை தங்கள் விளையாட்டுப் பொருட்களாக நினைத்து ஆபத்தை உணராமல் விளையாடி வருகின்றனர்.
இதுதவிர, கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப் பயன்படும் உப்புக்கரைசல் பாக்கெட்டுகளும் பாதுகாப்பு அற்ற நிலையில் வைத்திருப்பதால் அவற்றையும் சிறுவர்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.
எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் செங்காடு பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையத்தை மீண்டும் திறக்கவும், மருத்துவ உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைக்கவும், இதேபோல் பூட்டி கிடக்கும் மற்ற துணை சுகாதார நிலையங்களையும் திறந்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.