போக்குவரத்து நெரிசல் சிக்கி தவிக்கும் கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி, ஜூலை 17: கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவல் நிலையத்தில் மிக குறைந்த அளவு போலீஸார் உள்ளதால், போக்குவரத்தை சீர் செய்யும் காவலர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தின் கடை
கள்ளக்குறிச்சி, ஜூலை 17: கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவல் நிலையத்தில் மிக குறைந்த அளவு போலீஸார் உள்ளதால், போக்குவரத்தை சீர் செய்யும் காவலர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தின் கடைகோடியில் உள்ளது கள்ளக்குறிச்சி. இவ்வூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்டது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கேரளம், கர்நாடகம், திருப்பதி, சென்னை செல்வோர்க்கு மையப் பகுதியாக கள்ளக்குறிச்சி அமைந்துள்ளது.
நகராட்சிக்கு உட்பட்ட பகுதியை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இக் கிராம மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்காகவும் தங்கள் விளைவித்த விளைபொருள்களை விற்பனை செய்வதற்கும் கள்ளக்குறிச்சிக்கு கொண்டு வரவேண்டும். அதனால் போக்குவரத்து மிகுந்த நெரிசல் ஏற்படுகின்றன.
சேலம்- சென்னை நெடுஞ்சாலை பகுதியான கள்ளக்குறிச்சியில் இரு சக்கர வாகனங்கள், பஸ், லாரி, கார், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் செல்லும் சாலையாக அமைந்துள்ளது. மிக குறைந்த மாதங்களிலேயே கள்ளக்குறிச்சி மாவட்டம் பெறும் அந்தஸ்தில் விளங்கி வருகிறது.
மேலும் கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட எல்லையில் பொறியியல் கல்லூரிகள், தனியார் பள்ளிகள் அதிக அளவில் உள்ளன. இதனால் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
பள்ளி நேரங்களில் குறிப்பிட்ட ஒரு இடத்துக்கோ அல்லது அலுவலகத்துக்கோ செல்ல வேண்டுமேயானால் முடியாது.
கள்ளக்குறிச்சியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், பத்திரபதிவு அலுவலகம், நீதிமன்றங்கள், வங்கிகள், ஏ.டி.எம்.கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், எல்.ஐ.சி., கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளிட்ட பல்வேறு அலுவலங்கள் இயங்கி வருகின்றன.
கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து காவல் நிலையம் கடந்த 2006-ல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரியய்யா தொடக்கி வைத்தார். இக் காவல் நிலையத்தில் 1 காவல் ஆய்வாளரும், 2 உதவி ஆய்வாளர்களும், 4 தலைமைக் காவலர்களும், 4 முதல்நிலைக் காவலர்களும், 36 காவலர்களும் 1 ஓட்டுனரும் என 48 பேர் உள்ளனர். தற்போது 2 உதவி ஆய்வாளர்களும், 2 சிறப்பு உதவி ஆய்வாளர்களும், 4 தலைமைக் காவலர்களும், 3 முதல்நிலைக் காவலர்களும் ஆக 11 பேரே பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த காவல் நிலையத்துக்கு தனி கட்டடமும் கிடையாது ஜீப்பும் கிடையாது; இக் காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர் கடந்த 6 மாதம் முன்பு பணிமாறுதல் ஆகி சென்றார். அதற்கு பதிலாக யாரும் வரவில்லை. காலை 7.30 மணிமுதல் இரவு 9 மணிவரை டிராபிக் பார்த்து வருகின்றனர். நாளுக்கு நாள் கள்ளக்குறிச்சி பகுதியில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது.
கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு, பஸ் நுழைவு வாயில், வெளியே வரும் பகுதி உள்ளிட்ட இடங்களில்தான் போலீஸார் உள்ளனர். காந்திசாலை, கச்சேரிசாலை, மணிகூண்டு பஸ்நிறுத்தம், துருகம்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸார் இருந்தால்தான் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடியும். ÷கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு அருகேதான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பஸ்நிலையம், நீதிமன்றம், வங்கிகள் அதிக அளவு உள்ளன. அதனால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலின்போது ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் செல்ல, அவர்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சூ.சேவியர் தனராஜை, கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் நிருபர் தொடர்பு கொண்டு கேட்டபோது பக்கத்து காவல் நிலையங்களில் இருந்து இருவர் தினமும் வருவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார்.