மதுரை,மே 31: தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதியின் 88-வது பிறந்த நாளைக் கொண்டாடுவதில் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமாகவும், முன்னணித் தலைவர்கள் உற்சாகமின்றியும் காணப்படுகின்றனர்.
கருணாநிதியின் 88-வது பிறந்தநாள் ஜூன் 3 வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி 2ஜி வழக்கில் கைதாகி தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்னும் வேறு யாரெல்லாம், எப்போது கைது செய்யப்படுவார்களோ என்ற கவலையும் கருணாநிதிக்கு உண்டு. குடும்பத்திலும் குழப்பம். கட்சியைக் காப்பாற்றுவார்கள் என எதிர்பார்த்தவர்கள் எல்லாம் தங்களையும், சொத்துகளையும் காப்பாற்றிக்கொள்ள திரைமறைவு சந்திப்புகளை நடத்திக் கொண்டிருக்கிற நேரம் இது.
இந்தச் சூழ்நிலையில் வரும் பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாட எவருக்கும் மனம் வராது. தேர்தல் தோல்விக்கு வழக்கமாக புள்ளிவிவரங்களை எடுத்துக் கூறி தொண்டர்களின் சோர்வைப் போக்கும் கருணாநிதி, இந்த முறை அதைத் தவிர்த்துள்ளார். மக்கள் தனக்கு ஓய்வளித்து விட்டதற்கு நன்றி என்று மட்டும் கூறிவிட்டு அறிக்கையை முடித்துக் கொண்டது அவரது உற்சாகமிழந்த மனநிலைக்கு சான்றாகும் என்பது கட்சியினர் கருத்து. கருணாநிதியும் இந்த ஆண்டு தனது பிறந்த நாளைக் கொண்டாடும் மனநிலையில் இல்லையாம். ஆனால், அவருடன் எப்போதும் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள்கள் சிலர் கருணாநிதியை மகிழ்விக்கும் வகையில் "தேர்தல் தோல்வியில் துவண்டு கிடக்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டுமானால் இந்த ஆண்டும் பிறந்த நாளைக் கொண்டாடியே தீர வேண்டும்' என்று கூறியதால் "கொண்டாடிக் கொள்ளுங்கள்' என கருணாநிதி அனுமதி அளித்து விட்டதாகக் கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரது 88-வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.ஆட்சியில் இருந்த காலங்களில் கருணாநிதியின் பிறந்த நாளைக் கொண்டாட முன்னணித் தலைவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்குவார்கள். செலவையும் முன்னணித் தலைவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். தொண்டர்கள் விழாக்களில் பங்கேற்று வாழ்த்துக் கோஷங்களை எழுப்பிவிட்டு வருவது வழக்கம். ஆனால் இந்த முறை நிலைமை தலைகீழ்.
ஆட்சியும், அதிகாரமும் இருக்கும்போது பலன் அடைந்தவர்கள் அவற்றைத் தக்க வைத்துக் கொள்ளவும், மேலும் பலன் அடையவும் தலைமையைக் குளிர்விக்க விழாக்களை நடத்தி ஆதாயம் பெற்று வந்தனர்.
தேர்தல் தோல்விக்குக் காரணமான கட்சிக்காரர்களின் நடவடிக்கைகளை விரிவாக அலசி ஆராய்ந்து பேசிக் கொண்டிருக்கும் அடிமட்டத் தொண்டர்கள் கருணாநிதியின் பிறந்த நாளைக் கொண்டாடி ஆறுதல் தேடிக் கொள்ள முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
""தேர்தல் தோல்வியால் துவண்டு போனவர்கள் தலைவர்கள்தானே தவிர, தொண்டர்கள் அல்ல. தலைவர்களுக்கு "இழப்பு' இருக்கலாம். தேர்தல் நேரத்தில் மட்டும் மூன்று முறை சிறிய தொகை பட்டுவாடா செய்யப்பட்டது. அதுமட்டும்தான் கண்ட பலன். இனிமேல் எல்லோரும் ஒன்றுதான்'' என்ற மனநிலை தொண்டர்களிடம் காணப்படுவதே இந்த உற்சாகத்திற்குக் காரணம் என்கிறார் ஒரு நிர்வாகி. கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடுவதில் ஆர்வம்காட்டி வரும் கீழ்மட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் கொடிக்கம்பங்களைப் புதுப்பித்தல், கட்சிக் கொடிகளை ஏற்றுதல், அன்னதானம் செய்தல், ஏழைகளுக்கு உதவுதல் போன்றவற்றை மேற்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.