உரங்களின் விலை திடீர் உயர்வு: விவசாயிகள் வேதனை
அரக்கோணம், நவ.1: கடந்த 15 நாள்களில் காம்ப்ளக்ஸ் உரங்களின் விலை மூட்டைக்கு ரூ.250-க்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். தமிழக அரசின் 4 சதவீத வரி குறைப்புக்குப் பிறகு பூச்சிக்
அரக்கோணம், நவ.1: கடந்த 15 நாள்களில் காம்ப்ளக்ஸ் உரங்களின் விலை மூட்டைக்கு ரூ.250-க்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
தமிழக அரசின் 4 சதவீத வரி குறைப்புக்குப் பிறகு பூச்சிக்கொல்லிகள், யூரியா ஆகியவை விலை குறைந்துள்ளன. இந்நிலையில் அகில இந்திய அளவில் காம்ப்ளக்ஸ் உரங்கள் கடும் விலை உயர்வைச் சந்தித்துள்ளன.
இந்தியாவில் கோரமண்டல், ஸ்பிக், பாக்ட், இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் ஆகிய நிறுவனத்தினர் பல்வேறு காம்ப்ளக்ஸ் உரங்களைத் தயாரித்து வருகின்றனர். கடந்த 15 நாள்களில் இந்த அனைத்துத் தயாரிப்புகளும் விலையேறியுள்ளன. 16-20 ரகம் ஒரு மூட்டை ரூ.533-லிருந்து ரூ.720 ஆகவும், 20-20 ரகம் ரூ.510-லிருந்து ரூ.740 ஆகவும், 14-28-14 ரகம் ரூ.545-லிருந்து ரூ.755 ஆகவும், டிஏபி ரூ.686-லிருந்து ரூ.925 ஆகவும் விலை உயர்ந்துள்ளன.
தற்போது நவரைப்பட்ட காலமாக இருப்பதால் நவம்பர், டிசம்பர் காலத்தில் விவசாயிகள் நாற்றுவிடத் தொடங்குவர். இதற்கு காம்ப்ளக்ஸ் உரம் மிகவும் அவசியமாகும். இந்நிலையில் இந்த விலை உயர்வால் நாற்று விடலாமா, வேண்டாமா என விவசாயிகள் யோசிக்கத் தொடங்கிவிட்டனர். பொட்டாஷ் உரத்தின் விலை கடந்த 5 மாதங்களில் இரு மடங்கு அதிகரித்தது. ரூ.232லிருந்து ரூ.350 வரை விற்கப்பட்டு வந்த பொட்டாஷ் உர மூட்டைகள், தற்போது ரூ.565-க்கு விற்கப்படுகிறது.
ஏற்கெனவே விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமல் வேதனையில் இருந்த விவசாயிகளுக்கு, உரங்களின் இந்த விலையேற்றம் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக உள்ளது.
உரங்களின் இந்த விலையேற்றத்தைக் குறைக்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.