சாலை வசதியும் இல்லை, மின் இணைப்பும் இல்லை!
கும்மிடிப்பூண்டி, செப்.5: கும்மிடிப்பூண்டியை அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த அரியப்பாக்கம் புதிய பவானி நகரைச் சேர்ந்த 31 குடும்பத்தினர் கடந்த ஒன்றரை வருடமாக ஓலை குடியிருப்புகளில் சாலை வசதி, மின
தமிழ்நாடுசாலை வசதியும் இல்லை, மின் இணைப்பும் இல்லை!
கும்மிடிப்பூண்டி, செப்.5: கும்மிடிப்பூண்டியை அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த அரியப்பாக்கம் புதிய பவானி நகரைச் சேர்ந்த 31 குடும்பத்தினர் கடந்த ஒன்றரை வருடமாக ஓலை குடியிருப்புகளில் சாலை வசதி, மின
கும்மிடிப்பூண்டி, செப்.5: கும்மிடிப்பூண்டியை அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த அரியப்பாக்கம் புதிய பவானி நகரைச் சேர்ந்த 31 குடும்பத்தினர் கடந்த ஒன்றரை வருடமாக ஓலை குடியிருப்புகளில் சாலை வசதி, மின்சார வசதி உள்பட எந்த அடிப்படை வசதியுமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையம் பகுதியில் ஆரணி ஆற்றங்கரையோரம் பலர் வீடுகள் கட்டி குடியிருந்தனர். பெரியபாளையத்தை அடுத்த பாலேஸ்வரன் பகுதியில் தடுப்பணை கட்டும் பணிக்காக ஆரணி ஆற்றங்கரையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இதையடுத்து அங்கு வீடுகள் கட்டி குடியிருந்தவர்கள் தாங்கள் வசிக்க இடமில்லாதது குறித்து முறையிட்டனர். இதையடுத்து அரியப்பாக்கம் காலனி அருகில் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த 31 குடும்பங்களுக்கும் இடம் ஒதுக்கி தரப்பட்டது. அந்த இடத்தில் இந்த 31 குடும்பத்தினரும் ஓலை குடிசைகள் கட்டிக் கொண்டனர்.
அரியப்பாக்கம் புதிய பவானி நகர் என்று அழைக்கப்படும் இந்த பகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மக்கள் சாலை வசதி, மற்றும் மின்சார வசதி இன்றி வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் குடிநீரின்றி சிரமப்படுவது குறித்து கடந்த 6 மாதத்துக்கு முன்பு தினமணியில் செய்தி வெளி வந்தது. இதையடுத்து குடிநீர் வசதி மட்டும் செய்யப்பட்டது.
ஆனால் சாலை வசதி, மின்சார வசதி, இவர்கள் வசிக்கும் வீட்டுக்கு பட்டா உள்ளிட்ட பல கோரிக்கைகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் ஆத்துபாக்கம் ஊராட்சி மற்றும் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளிடம் கேட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இது குறித்து அரியப்பாக்கம் புதிய பவானி நகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் கேட்ட போது பாதுகாப்பற்ற ஓலைக் கூரையில் கடந்த ஒன்றரை வருடமாக நாங்கள் வசித்து வருகிறோம். சமையல் செய்யும் போதோ அல்லது வேறு சந்தர்பங்களிலோ இந்த ஓலை குடிசை தீப்பற்றிக் கொண்டால் இப்பகுதியில் உள்ள 31 வீடுகளும் எரிந்து சாம்பலாகும் நிலை ஏற்படும். எனவே முறைப்படி இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்துக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கி, தொகுப்பு வீடுகள் கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து இப்பகுதியைச் சேர்ந்த அமுதா என்பவரைக் கேட்ட போது நாங்கள் வசிக்கும் பகுதியை ஒட்டி புதர் பகுதிகள் நிறைந்து உள்ளன. இதில் கொடிய விஷப்பாம்புகள் குடியிருக்கின்றன. அவைகள் சர்வ சாதாரணமாக நாங்கள் வசிக்கும் பகுதிக்குள் வந்து செல்கின்றன. இதனால் இரவு நேரத்தில் நாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே பயப்படுகிறோம் என்றார்.
அ.தி.மு.க நிர்வாகியான இப்பகுதியைச் சேர்ந்த ஜி.டி. வேலுமயில் இது குறித்து தெரிவிக்கும் போது "எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் இப்பகுதி மக்கள் சிரமப்படுகிறோம். இப்பகுதியைச் சேர்ந்த 60 மாணவர்கள் பிற இடங்களுக்கு சென்று படித்து வருகிறார்கள். அடிப்படை தேவையான மின்சாரம், சாலை வசதி, பாதுகாப்பான குடியிருப்பு இன்றி நாங்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம். சில நாள்கள் முன்பு கூட இப்பகுதியில் மூன்றரை அடி கட்டு விரியன் பாம்பு நுழைந்தது. அதை ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்று இப்பகுதியின் நிலையை எடுத்துரைத்தோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரை கேட்டால் போதிய நிதி இல்லை, விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரப் போகிறது. அடுத்து வரும் தலைவரை கேட்டுக் கொள்ளுங்கள் என்கிறார். எல்லாபுரம் ஒன்றிய குழு தலைவரிடம் முறையிட்டால் இப்பகுதியில் சாலை வசதியை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது என்கிறார். ஆனால் சாலை போடுவதற்கான அறிகுறி ஏதும் இல்லை' என்றார் வேலு மயில்.
அடிப்படை வசதியின்றி அவதிப்படும் இப்பகுதி மக்களின் நியாயமான தேவைகளை நிறைவேற்றும் விதமாக இப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி, இப்பகுதி மக்களுக்கு மனைப் பட்டா வழங்கி அவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுப்பதுடன், இப்பகுதியில் மின்சார வசதியை ஏற்படுத்தி, இப்பகுதியை ஒட்டி விஷப்பாம்புகள் குடியிருக்கும் புதர் பகுதியை அகற்றி இப்பகுதி மக்கள் பாதுகாப்பாக வாழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் கோரிக்கையாகும்.