முகப்பு
தமிழ்நாடு

புதர் மண்டிய அரசு மருத்துவமனை வளாகம் சீரமைக்கப்படுமா?

பொன்னேரி, ஆக. 30: பொன்னேரி அரசு மருத்துமனையில் இருக்கும் உள்நோயாளிகள் பிரிவு கட்டடத்தைச் சுற்றிலும் புதர்கள் மண்டி கிடக்கின்றன. இதனால் புதர்களின் மறைவில் பாம்பு உள்ளிட்டவை மறைந்திருக்கலாம் என அங்கு தங

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:42 PM
பகிர்:

பொன்னேரி, ஆக. 30: பொன்னேரி அரசு மருத்துமனையில் இருக்கும் உள்நோயாளிகள் பிரிவு கட்டடத்தைச் சுற்றிலும் புதர்கள் மண்டி கிடக்கின்றன. இதனால் புதர்களின் மறைவில் பாம்பு உள்ளிட்டவை மறைந்திருக்கலாம் என அங்கு தங்கி சிகிச்சைப் பெறும் நோயாளிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பொன்னேரி ரயில் நிலையச் சாலையில் பொன்னேரி தாலுக்கா தலைமை அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. 1964-ம் ஆண்டு கட்டப்பட்டு அப்போதைய முதல்வர் பக்தவச்சலத்தால் திறந்து வைக்கப்பட்ட இம்மருத்துவமனையில் நாள்தோறும் 2500-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சைப் பெற்று செல்கின்றனர்.அத்துடன் உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மகப்பேறு பிரிவில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி உள்ளிட்ட தொடர் சிகிச்சைப் பெற்று செல்கின்றனர்.

இம்மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு இல்லாததால் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் புறநகர் மின்சார ரயில் மார்க்கம் உள்ளிட்ட பகுதிகளில் விபத்தில் சிக்கி காயமடைபவர்களுக்கு இங்கு முதலுதவி சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டு 40 கி.மீ. தூரமுள்ள சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

விபத்தில் சிக்கி காயமைடைபவர்கள் அவசர சிகிச்சைப் பெற 40 கி.மீ. தூரம் செல்லும் போது உயிரிழக்கும் சம்பவம் ஏற்படுகிறது.

மருத்துவர்கள் பற்றாக்குறை... அதே போன்று இம்மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியிடம் எண்ணிக்கை 18. ஆனால் இதில் பாதியளவு எண்ணிக்கையில் கூட மருத்துவர்கள் பணியில் இல்லை.இதனால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகளில் காயமடைபவர்களை இம்மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது அங்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லாததால் பெரிதும் அவதிப்படும் நிலை உள்ளது.

புதர்கள் மண்டிக் கிடக்கும் மருத்துவமனை... மேலும் இம்மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சைப் பெறும் ஆண்கள், பெண்கள் பிரிவு கட்டடத்தின் பின்புறம் செடிகள் வளர்ந்து கிடக்கின்றன.

அத்துடன் இம்மருத்துவமனையில் கழிவுநீர்த் தொட்டி நிரம்பியவுடன் எடுக்கப்படாததன் காரணமாக மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு அருகில் அவ்வப்போது கழிவுநீர் தேங்கும் நிலை உள்ளது.

அத்துடன் பிரேதப் பரிசோதனை கூடத்தில் இருந்து அவ்வப்போது வரும் துர்நாற்றத்தால் அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

 அவசர சிகிச்சைப் பிரிவு, ஸ்கேன் வசதி, பிரேத பரிசோதனை செய்யும் கட்டடத்துக்கு குளிர்சாதன வசதி, இரவு நேரத்தில் கிராம பகுதியில் இருந்து வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை மற்றும் போதிய மருத்துவர்களை பணியில் நியமிக்கவும், மருத்துவமனையைச் சுற்றிலும் மண்டிக் கிடக்கும் செடி, கொடிகளை அகற்றவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் எதிர்பார்ப்பாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →