முகப்பு
தமிழ்நாடு

நம்பிக்கையின் பிடியில் இவர்களின் தூரிகைகள்...

புதுச்சேரி, பிப். 15: இது வழக்கமான ஒரு ஓவியப் போட்டிதான். ஆனால், வரைபவர்கள் சற்று வித்தியாசமானவர்கள். வாழ்வோம் என்ற நம்பிக்கையை மட்டுமே பலமாகக் கையில் பிடித்துக் கொண்டு, தூரிகை உதவியோடு ஓவியம் வரைபவர்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 4:42 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 9:43 PM

புதுச்சேரி, பிப். 15: இது வழக்கமான ஒரு ஓவியப் போட்டிதான். ஆனால், வரைபவர்கள் சற்று வித்தியாசமானவர்கள். வாழ்வோம் என்ற நம்பிக்கையை மட்டுமே பலமாகக் கையில் பிடித்துக் கொண்டு, தூரிகை உதவியோடு ஓவியம் வரைபவர்கள்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை புதன்கிழமை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 20 பேரும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருக்கும் சிறார்கள். தொழில்முறை ஓவியர்களோ, அதற்கான பயிற்சியோ கொண்டவர்கள் அல்லர்.

தங்களது பெற்றோருக்கும், தங்களைப் போல புற்றுநோயால் பாதிக்கப்படும் சிறார்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியின் ஒரு சிறு பங்களிப்பாக, இவர்கள் ஓவியம் வரைந்து கொண்டிருந்தனர்.

Advertisement

விஷயம் இதுதான். உலக அளவில் 1.60 லட்சம் குழந்தைகளுக்கு மேல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இதில் 90 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர் என்கிறது உலகளாவிய புள்ளிவிவரங்கள். அதிலும், வளர்ந்த நாடுகளில் பாதிக்கப்படும் குழந்தைகளில் 80 சதவீதம் பேர் உயிர் பிழைப்பதாகவும், வளரும் நாடுகள், பின்தங்கிய நாடுகளில் விழிப்புணர்வு இல்லாதது, முன்கூட்டியே நோயைக் கண்டறியாதது போன்றவற்றால் அது 60 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 100 குழந்தைகளுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இதில் 20 சதவீதம் பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்.

இதற்குக் காரணம், தொடர் சிகிச்சையிலும், மருத்துவர்களின் கண்காணிப்பிலும் இல்லாததுதான். பாதி சிகிச்சையில் வெளியேறுவதும் உயிரிழக்க ஒரு காரணம். குணப்படுத்த முடியாத

புற்று நோயால் இறப்பது மற்றொரு காரணம். தொடர் சிகிச்சையை உறுதி செய்ய, சர்வதேச குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு தினமான பிப்ரவரி 15-ம் தேதி, குழந்தைகள் ஆதரவு குழுவை சுரபி எனும் பெயரில் ஜிப்மர் மருத்துவமனை தொடங்கி இருக்கிறது. இரு மாதங்களுக்கு ஒரு முறை கூடும் சுரபி, சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் பெற்றோரை, குணமடைந்த குழந்தைகளின் பெற்றோரோடு பேசவைக்கும் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி.

இதில் பல தகவல்களைப் புதியவர் கேட்டறிந்து, தொடர் சிகிச்சைக்கு பயமின்றி வர முடியும். இதே கூட்டத்தில், பெற்றோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் மருத்துவர்கள் விளக்குவார்கள்.

ஓவியம் வரைந்த சிறுவன் யேசுதாஸ் உடன் அமர்ந்திருந்த அவனது தாயார் மேரி, ரத்த புற்றுநோய்க்கான தொடர் சிகிச்சையால் தற்போது மகனின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகக் கூறுகிறார். குணமடைந்த சிறுவர்களின் பெற்றோரிடம் கலந்துரையாடியதால், மகனை இழக்கமாட்டோம் எனும் நம்பிக்கை தமக்கு ஏற்பட்டிருப்பதாகவும், இந்த கூட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும் கூறுகிறார்.

இந்த பெற்றோரின் நம்பிக்கை ஒளியில்தான், இறைவனால் சிறு பிழையுடன் வரையப்பட்ட அழகான தூரிகைகள் வாழ்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.