பொவிழந்த ஊசுட்டேரி பறவைகள் சரணாலயம்
புதுச்சேரி, ஜன. 11: புதுச்சேரியை அடுத்த ஊசுட்டேரி பறவைகள் சரணாலயம் தானே புயலில் சிக்கி முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளது. இதனால் இங்கு வரும் வெளிநாட்டுப் பறவைகள் எண்ணிக்கையும் குறைந்துபோனது. புதுச்சேரியில
புதுச்சேரி, ஜன. 11: புதுச்சேரியை அடுத்த ஊசுட்டேரி பறவைகள் சரணாலயம் தானே புயலில் சிக்கி முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளது. இதனால் இங்கு வரும் வெளிநாட்டுப் பறவைகள் எண்ணிக்கையும் குறைந்துபோனது.
புதுச்சேரியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஊசுட்டேரி ஏரி. தமிழக-புதுச்சேரி எல்லையில் 800 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்த இந்த ஏரியின் 390 ஹெக்டேர் பரப்பு மட்டுமே புதுச்சேரி மாநிலத்தில் இருக்கிறது. மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 15.54 சதுர கிலோ மீட்டர். ஏரிக்கரையின் மொத்த நீளம் 7.28 கி.மீ. 1873-ம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சியின்போது ஏரிக்கு நீர்வரத்துக்காக, சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதுவை மாநில சுத்துக்கேணி அணையிலிருந்து தண்ணீர் வருகிறது.
ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் உள்பட பல்வேறு வகையான பறவைகள் இந்த ஏரிக்கு வந்து செல்கின்றன. இதனால் 2008 அக்டோபர் 7-ம் தேதி இந்த ஏரி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுற்றுலா வரும் பொதுமக்கள், வெளிநாட்டினர் எண்ணிக்கை இங்கு அதிகரித்துள்ளது.
Advertisement
வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் பறவைகள் சரணாலயம் இது. பறவைகளை மிக அருகில் காண விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்காக படகுகள் இயக்கப்பட்டு வந்தன. ஒரு பெரிய மோட்டார் படகு, மிதி படகுகள், துடுப்பு படகுகள் ஆகியவை இயக்கப்பட்டு வந்தன.
கடந்த டிசம்பர் 26-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, இங்கு வந்து சென்ற சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து ரூ.23 ஆயிரம் கட்டணம் வசூலாகியிருந்தது.
படகு குழாமிலிருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் சுமார் 4 கி.மீ. தூரம் பயணித்தால் சிறியதும், பெரியதுமாக தீவுப் பகுதிகள் இருக்கின்றன. அவற்றில் ஏராளமான மரங்கள் இருப்பதால், பறவைகள் கூட்டம், கூட்டமாக அங்கு அமர்ந்திருக்கும். கடந்த ஆண்டு இறுதியில் வீசிய புயலால், அத்தீவுகளில் இருந்த பெரும்பாலான மரங்கள் சாய்ந்துள்ளன. கோடைக் காலம் நெருங்கும் நேரத்தில் இங்கு வரும் பறவைகள் எண்ணிக்கை அதிகரிக்கும். குறிப்பாக அக்டோபர் முதல் மே மாதம் வரையில் ஏரியில் தண்ணீர் தேங்கியிருக்கும். அப்போதுதான் இங்கு ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடும். மேலும், உள்நாட்டுப் பறவைகளும் அதிக எண்ணிக்கையில் காணப்படும்.
இப்போது புயலால் மரங்கள் குறைந்திருப்பதால், இங்கு வந்த வெளிநாட்டுப் பறவைகள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டன. அதனால் பறவைகள் எண்ணிக்கை இங்கு குறைவாகவே காணப்படுகிறது. மேலும், புயலில் படகு குழாமின் நடைபாதை பாதிக்கு மேல் அரிக்கப்பட்டு, ஏரிக்குள் சென்றுவிட்டது. படகு குழாமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 14 படகுகளில் 10 படகுகள் பயன்படுத்த முடியாத அளவுக்குச் சேதமடைந்தன. அதில் 40 பேர் அமர்ந்து பயணிக்கும் பெரிய விசைப் படகு முற்றிலுமாகச் சேதமடைந்துவிட்டது. அதன் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம். அதன் உடைந்த பாகங்களைக் கொண்டு, படகுகளுக்கான நடைமேடை அமைக்கப்பட்டிருக்கிறது. இப்போது படகு குழாமில், ஒரு மோட்டார் படகும், இரு துடுப்புப் படகுகளும் இயக்கப்படுகின்றன.
படகு குழாம் முன்பு வளர்ந்திருந்த மரங்கள் முற்றிலுமாகச் சாயந்துவிட்டன. சுற்றுலாப் பயணிகள் அமர்வதற்கான நாற்காலிகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்துள்ளன. ஏரியின் கரையோரங்களில் இருந்த மரங்கள் உடைந்து விழுந்தும், பல மரங்களில் இலைகள் முற்றிலுமாக உதிர்ந்தும் காணப்படுகிறது. இதனால், பறவைகள் சரணாலயம் பொலிவிழந்து காணப்படுகிறது.