முகப்பு
தமிழ்நாடு

முடங்கியிருக்கிறதா அரவானிகள் நல வாரியம்?

திருச்சி: கடந்த தி.மு.க. அரசில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரவானிகள் நல வாரியம் இப்போது ஏறத்தாழ முடக்கப்பட்ட நிலையில் இருப்பதாக அரவானிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 2011-12-ம் ஆண்டுக்கான மாநில அரசின் நிதி

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:14 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 10:01 PM

திருச்சி: கடந்த தி.மு.க. அரசில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரவானிகள் நல வாரியம் இப்போது ஏறத்தாழ முடக்கப்பட்ட நிலையில் இருப்பதாக அரவானிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

2011-12-ம் ஆண்டுக்கான மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு அரவானிகள் நல வாரியத்துக்கு ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், அதன்மூலம் அரவானிகள் சமூகத்துக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதே நிதிநிலை அறிக்கையில், அரவானிகள் சுய உதவிக் குழுக்களுக்கு 25 சதவீதம் மானியத்துடனான கடனுதவி ரூ. 15 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Advertisement

2008-ம் ஆண்டில் அப்போதையை தி.மு.க. அரசால் அரவானிகள் நல வாரியம் தொடங்கப்பட்டது. அப்போது அலுவல் சாரா உறுப்பினர்களாக அரவானிகள் சமூகத்தைச் சேர்ந்த விஜி, பிரியாபாபு, நூரி, மோகனா, சலிமா, ஜீவா, கனிமொழி, காதர்மொய்தீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

ஓரிரு கூட்டங்கள் நடைபெற்றும்கூட, அரவானிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் "குடும்ப அட்டை' வழங்குவதைத் தவிர வேறெந்த உருப்படியான பணிகளும் நடைபெறவில்லை.

பிறகு அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, அரவானிகள் நல வாரியம் புதுப்பிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் அரவானிகள் சமூகத்தில் செயல்பட்டு வரும் பிரமுகர்களிடம் சுய விவரக் குறிப்புகள் பெறப்பட்டன.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது, வாரியத்துக்கான காலம் முடிந்தும் புதுப்பிக்கப்படாததால், நலத் திட்ட உதவிகளை வழங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

நலத் திட்ட உதவிகளை வாரிய உறுப்பினர்கள் முன்னிலையில் இறுதி செய்த பிறகே செயல்படுத்த முடியும் என்பதால், அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு அந்த வாரியக் கூட்டம் நடைபெறவே இல்லை என்று கூறுகின்றனர் அரவானிகள். இதனால், கடந்த ஓராண்டு காலத்தில் எங்காவது ஓரிரு மாவட்டங்களில் குடும்ப அட்டை வழங்கப்பட்டதைத் தவிர, வேறெதுவும் நடைபெறவில்லை என்றும் வருத்தத்துடன் குறிப்பிடுகின்றனர் அவர்கள்.

இதுதொடர்பாக திருச்சியை மையமாகக் கொண்டு செயல்படும் சேஃப் அமைப்பின் தலைவி பி. கஜோல் கூறியது:

"திருச்சியில் பிரியங்கா என்றொரு அரவானி, அனேகமாக தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக செவிலியர் கல்வி படித்து வருகிறார்.

இவருக்கு அரவானிகள் நல வாரியத்திலிருந்து கல்வி உதவித் தொகை பெற்றுத் தர வேண்டும் எனப் பல முறை மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அரசுத் தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் இல்லை.

ஒரு பைசாகூட அந்தக் கல்வி நிறுவனத்துக்கு கட்டணமாகச் செலுத்தப்படவில்லை. ஓராண்டு கல்வி முடிந்து விட்டது. தேர்வு எழுத வேண்டியது மட்டுமே. வரும் 13-ம் தேதிக்குள் ரூ. 18 ஆயிரம் கட்டணத்தைச் செலுத்தினால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று தனியார் செவிலியர் பயிற்சி நிறுவனத்தினர் கூறிவிட்டனர்' என்கிறார் கஜோல்.

செவிலியர் பயிற்சி பெறும் அரவானிக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கவில்லை என்றால், அரவானிகளுக்கென நலத் திட்டங்களை அறிவிப்பது யாருக்காக? என்ற கேள்வி எழுகிறது. கல்வி உதவித் தொகைகூட கிடைக்காவிட்டால் இந்தச் சமூகத்தில் வேறு எப்படித்தான் மாற்றத்தைக் கொண்டு வருவது எனப் புரியவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அரவானிகள் நல வாரியத்தைப் புதுப்பித்து, இதேபோல கல்வி பயிலும் அரவானிகளுக்கு உரிய ஆவணங்களைச் சரிபார்த்து கல்வி உதவித் தொகை தாராளமாக வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.