ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களில் டெய்லர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு,50 சதவீத பணியிடங்கள் காலியாக இருப்பதால் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 160 ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆயத்த ஆடைகள்,
புதுவை, கேரளம், கர்நாடகம் மற்றும் வட மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரேசில், ஆஸ்திரேலியா, இலங்கை, மலேசியா, ஜாம்பியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த 4 ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடி காரணமாக, இந்நிறுவனங்களில் டெய்லர்கள், உதவியாளர்கள், கட்டிங் மாஸ்டர்கள், லைன் செக்கர்கள், மேற்பார்வையாளர்கள், பட்டன் பொருத்துபவர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் பணியாற்றுவோரில் பெரும்பாலானோர் மாற்றுத் தொழிலை தேடிச் சென்றுவிட்டனர்.
ஆயத்த ஆடை உற்பத்திக்கு பிரதானமான டெய்லர் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக உள்ளதால், விழி பிதுங்கி நிற்கின்றனர் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள். இதனால், மத்திய அரசு உதவியுடன் தையல் பயிற்சி மையம் அமைத்து அதில் இருந்து டெய்லர்களை உருவாக்கி வருகின்றனர். இருப்பினும் பயிற்சி பெறும் டெய்லர்கள் வேறு நகரங்களுக்கு இடம் பெயர்ந்துவிடுவதால் நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட துணி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கச் செயலர் எஸ்.சிவானந்தன் கூறியது:
சர்வதேச பொருளாதார நெருக்கடி, 3 ஆண்டுகளாக நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, டாலர் விலையில் ஏற்படும் ஏற்ற, இறக்கம், நூல் விலை ஏற்றம் உள்ளிட்டவை காரணமாக ஆயத்த ஆடை நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
இப்போது டெய்லர்கள் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்காக, மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை உதவியுடன் ஒரு மாத இலவச தையல் பயிற்சி அளித்து வருகிறோம். பயிற்சி காலத்தில் ரூ.2,000 உதவித்தொகை அளிக்கப்படுகிறது. பயிற்சி முடித்தவுடன் தகுதிக்கேற்ப குறைந்தபட்சம் ரூ.5,000 சம்பாதிக்க இயலும். பயிற்சி முடிப்பவர்களுக்கு நாங்களே பணி வழங்குகிறோம் என்றார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட துணி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் வி.பி.சுப்பிரமணியன் கூறியது:
ஈரோட்டில் உள்ள ஒவ்வொரு ஏற்றுமதி நிறுவனத்திலும் குறைந்தபட்சம் 100 தையல் இயந்திரங்கள் இருக்கும். இதில் ஷிப்ட் அடிப்படையில் 150 பேர் பணியாற்ற வேண்டும்.
ஆனால், இப்போது பெரும்பாலான நிறுவனங்களில் 40 முதல் 50 பேர் மட்டும்தான் உள்ளனர். இங்குள்ள நிறுவனங்களில் 50 சதவீத டெய்லர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
கட்டிங் மாஸ்டர், லைன்செக்கர் உள்ளிட்ட பிற முக்கிய பணியிடங்களுக்கும் பற்றாக்குறை உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.