முகப்பு
தமிழ்நாடு

சாலையைக் கடக்க சுரங்கப்பாதை வேண்டும்: கிராம மக்கள்

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை கடக்க பாலமோ

Updated On : 10 அக்டோபர், 2012 at 3:20 AM
பகிர்:

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை கடக்க பாலமோ, சுரங்கப் பாதையோ அமைக்கப்படாததால் அப்பகுதியைச் சுற்றியுள்ள 5 கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 பொன்னேரி தாலுகா, சோழவரம் ஒன்றியத்தில் தேவனேரி, பழைய எருமை வெட்டிப்பாளையம், புதிய எருமை வெட்டிப்பாளையம், புதுக்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் உள்ளன.

 இக்கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்காக காரனோடை அல்லது சோழவரம் வந்துதான் செல்ல வேண்டும். அதேபோல, அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் இந்தப் பகுதிகளில்தான் கிடைக்கின்றன.

Advertisement

 சோழவரம், காரனோடை ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்காக அவர்கள் அன்றாடம் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டும். ஆனால், நெடுஞ்சாலையில் எப்போதுமே வாகனங்கள் கடுமையான வேகத்தில் வந்து செல்கின்றன.

 எனவே, இந்த சாலையை கடக்க மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். மேலும் விபத்துகள் நடக்கவும் அதிக வாய்ப்புள்ளன. இந்நிலையில், பொதுமக்கள் கடந்து செல்வதற்கு வசதியாக பாதை வளைவைகூட தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு அமைக்கவில்லை. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் 1 கி.மீ. தூரம் சுற்றி சென்று சாலையை கடக்க வேண்டியுள்ளது.

 தற்போது இங்கு ஆறு வழிச் சாலை அமைக்க பல கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, இங்குள்ள மக்களின் நலன் கருதி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் இங்கு சிறிய அளவிலான பாலம் அல்லது சுரங்கப் பாதையை அமைத்துத் தர வேண்டும். மேலும் உயர்கோபுர மின்விளக்கையும் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.