முகப்பு
தமிழ்நாடு

நவம்பர் இறுதியில் யானைகள் புத்துணர்வு முகாம்?

மேட்டுப்பாளையத்தை அடுத்த வனபத்ரகாளியம்மன் கோவில் அருகிலுள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில், யானைகள் புத்துணர்வு முகாம் நவம்பர் இறுதியில் நடத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.

Updated On : 21 அக்டோபர், 2012 at 3:21 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:48 AM

மேட்டுப்பாளையத்தை அடுத்த வனபத்ரகாளியம்மன் கோவில் அருகிலுள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில், யானைகள் புத்துணர்வு முகாம் நவம்பர் இறுதியில் நடத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் 2003ம் ஆண்டு முதல் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 2003, 2004, 2005 ஆகிய மூன்று ஆண்டுகள் நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு பகுதியில் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டது.

2011 இறுதியில் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாமில் 37 யானைகள்

Advertisement

பங்கேற்றன. அதில் 48 நாள்கள் வரை யானைகளுக்கு போதிய ஊட்டச்சத்து உணவுகள், மருந்துகள் வழங்கப்பட்டன.

இதனிடையே, 2012ம் ஆண்டிற்கான யானைகள் புத்துணர்வு முகாமுக்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணியில் வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்

துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.

மேட்டுப்பாளையம் பகுதியில் பல்வேறு கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில், நெல்லித்துறை அருகிலுள்ள வனபத்ரகாளியம்மன் கோவில் பின்புறம் உள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான 5 ஏக்கர் இடத்தில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெறும் என்று தெரிகிறது.

இந்த இடத்தை வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் இறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பகுதியில் யானைகளுக்கான தங்குமிடம் அமைத்தல், பாகன்கள் மற்றும் உதவிப் பாகன்களுக்கான தங்குமிடம், நடமாடும் கழிப்பறை வசதிகள், உணவு வசதிகள் போன்றவை அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதற்கான அரசாணையை எதிர்பார்த்து இந்து சமய அறநிலையத் துறை காத்திருக்கின்றனர். நவம்பர் முதல் வாரத்தில் அரசாணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் டெண்டர் விடப்பட்டு, முகாம் நடைபெறும் இடத்தில் பணிகள் நடைபெறும் என்றும், நவம்பர் இறுதியில் முகாம் தொடங்கும் என்றும் தெரிகிறது.

ஒரு யானைக்கு ரூ. 1 லட்சம் செலவு: மொத்தம் 48 நாள்கள் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாம் இந்த ஆண்டு நவம்பர் இறுதியில் தொடங்கி ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறும். முகாமில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு யானைக்கும் 48 நாள்கள் வரை சுமார் ரூ. 1 லட்சம் வரை செலவிடப்பட உள்ளது.

தமிழக அரசு சார்பில், யானைகள் புத்துணர்வு முகாமிற்கு ரூ. 45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.