முகப்பு
தமிழ்நாடு

போராட்டத்திற்கு ஆயத்தமாகி வரும் அட்டப்பாடி தமிழர்கள்

உச்ச நீதிமன்ற உத்தரவைக் காண்பித்து விவசாய நிலங்களில் இருந்து வெளியேறுமாறு கேரள அரசு நோட்டீஸ் அளித்துள்ளதால், அம்மாநிலத்தின் அட்டப்பாடி பகுதியிலுள்ள தமிழர்கள் போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

Updated On : 6 டிசம்பர், 2013 at 1:22 AM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:37 AM

உச்ச நீதிமன்ற உத்தரவைக் காண்பித்து விவசாய நிலங்களில் இருந்து வெளியேறுமாறு கேரள அரசு நோட்டீஸ் அளித்துள்ளதால், அம்மாநிலத்தின் அட்டப்பாடி பகுதியிலுள்ள தமிழர்கள் போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

தமிழகத்தை ஒட்டிய கேரள மாநில எல்லைப் பகுதியான அட்டப்பாடி பகுதியில் 3 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் தமிழர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் தென்னை, வாழை, பாக்கு போன்றவற்றைப் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி, சோலையூர், புதூர், அகழி, பாலூர், சாவடியூர் போன்ற கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் பல ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆதிவாசிகளிடம் இருந்து நிலத்தைப் பெற்று முறையாகப் பத்திர பதிவு செய்து, வரி செலுத்தியும் வந்தனர்.

இதனிடையே, அட்டப்பாடி பகுதியில் வசிக்கும் தமிழர்களிடையே, கேரள வருவாய்த் துறை அதிகாரிகள் நவம்பர் முதல் வாரத்தில் நோட்டீஸ் ஒன்றை அளித்தனர். அதில், "ஆதிவாசி மக்களிடம் இருந்து பெறப்பட்ட நிலங்களை மீண்டும்

Advertisement

ஆதிவாசிகளுக்கே வழங்க வேண்டி உள்ளது. எனவே, இந்த நோட்டீûஸக் கண்ட ஏழு தினங்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ள வேண்டும்' என்று உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி எச்சரிக்கை நோட்டீஸ் அளித்தனர்.

இந்நிலையில், கேரள அரசின் எச்சரிக்கை நோட்டீஸ் பெற்ற தமிழர்கள் செய்வது அறியாமல் திகைப்பில் உள்ளனர். கேரள போலீஸார் அடக்குமுறையைக் கையாள்வதாக தமிழர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழர்கள் மீது கேரள போலீஸார் வழக்குத் தொடுத்து வருவதால் அங்குள்ளவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

அகழியில் போராட்டம்: இதனிடையே அட்டப்பாடி தமிழர்கள் ஒருங்கிணைந்து, அகழியில் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தின்போது கேரள மாநில மொழி சிறுபான்மையினர் நலச் சங்கம் முறையாக அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவை அவர்கள் கோரி வருகின்றனர். மேலும், சமுதாய அமைப்புகளின் ஆதரவையும் திரட்டி வருகின்றனர்.

கோவையில் ஆலோசனை: இதுதொடர்பாக, கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை மாநிலத் தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் கூறியது: அட்டப்பாடி தமிழர்களுக்கு ஆதரவாக அடுத்த வாரத்தில் கோவையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளோம். இதில் 50-க்கு மேற்பட்ட சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். பொதுக்கூட்டத்திற்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.

அட்டப்பாடி தமிழர்களின் பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும். மேலும், தமிழர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.