பால் கொள்முதல் விலை உயர்கிறது?
தனியார் நிறுவனங்கள் அளித்து வரும் கூடுதல் விலைக்கு ஈடுகொடுக்கும் வகையில், பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ. 4 உயர்த்த பரிந்துரைக்கப்பட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் அளித்து வரும் கூடுதல் விலைக்கு ஈடுகொடுக்கும் வகையில், பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ. 4 உயர்த்த பரிந்துரைக்கப்பட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ள விவசாயிகளைத் திருப்திபடுத்தும் வகையில் புத்தாண்டுப் பரிசாக பால் கொள்முதல் விலை உயர்வு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்துக்கான ஆவின் நிறுவனம் கடந்த 1982ஆம் ஆண்டு கிருஷ்ணகிரியில் தொடங்கப்பட்டது. இரண்டு மாவட்டங்களையும் சேர்த்து 24,000 விவசாயிகள் ஆவின் நிறுவன உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களிடமிருந்து நாளொன்றுக்கு 1.26 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது.
Advertisement
விவசாயிகள் அளிக்கும் பாலில் கொழுப்புச் சத்து 4.80 சதம் இருந்தால் அதிகபட்சமாக லிட்டருக்கு ரூ.19.50-ம், குறைவான சதம் இருப்பின் அதற்குத் தகுந்தாற்போல விலை நிர்ணயம் செய்து அளிக்கப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலில் 75,000 லிட்டர் பால் பவுடர் தயாரிப்புக்காக கேரளத்துக்கு அனுப்பப்படுகிறது. எஞ்சியுள்ள பாலில் இருந்து நாளொன்றுக்கு 9,000 கிலோ வெண்ணெய், 1,750 கிலோ முதல் 2,000 கிலோ வரை நெய், பால்கோவா, பாதாம்பால் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.
தனியார் பால் நிறுவனங்களால் பாதிப்பு: இந்த நிலையில், ஆவின் நிறுவனத்துக்குப் போட்டியாக தனியார் பால் நிறுவனங்கள் விவசாயிகளை தங்கள் பக்கம் கவர்ந்திழுக்க கொழுப்புச் சத்து எத்தனை சதமாக இருந்தாலும் லிட்டர் பாலை ரூ.23 கொடுத்து வாங்குகிறது.
கூடுதல் பணம் காரணமாக ஆவின் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் பலர் பாதிப் பாலை ஆவினுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தனியார் பால் நிறுவனங்களுக்கு விற்கின்றனர்.
அண்மைக்காலமாக தனியார் நிறுவனங்களுக்கு அதிகளவில் பால் செல்வதைத் தடுக்கும் நோக்கில் ஆவின் நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 750 டன் மாட்டுத் தீவனம் வெளிச் சந்தையிலிருந்து கொள்முதல் செய்து கிலோவுக்கு ரூ.4 மானியம் அளித்து, ரூ.12-க்கு கொடுக்கப்பட்டது.
அடுத்தகட்டமாக, கால்நடைகள் அதிகளவில் பால் சுரக்க ஏதுவான சோளத்தட்டை ரூ.40 லட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டு, கிலோ ஒரு ரூபாய்க்கு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருப்பதுடன், கூடுதலாக ரூ.30 லட்சத்துக்கு கொள்முதல் செய்யவும் அரசு நிதி அளித்துள்ளது.
இதுபோல, பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டாலும், தனியார் நிறுவனங்கள் அளிக்கும் கூடுதல் விலையைக் காரணம் காட்டி அங்கு செல்வதைத் தடுக்க, உடனடியாக பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை உயர்த்த அரசுக்கு ஆவின் நிறுவனத்தால் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசின் அறிவிப்புக்காக காத்திருப்பு: இதற்கிடையில், பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால், ஆவின் நிறுவனங்களுக்கு பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ள நிலையில், அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாகவும், இந்த அறிவிப்பு புத்தாண்டுப் பரிசாக வெளியிடப்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.