முகப்பு
தமிழ்நாடு

மணிமங்கலம் ஏரியில் தொடரும் மண்குவாரிகள்: விவசாயிகள் அச்சம்

மணிமங்கலம் பகுதியில் உள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரியின் ஒருபகுதியில் 15 அடி ஆழத்துக்கும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:36 PM
பகிர்:

மணிமங்கலம் பகுதியில் உள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரியின் ஒருபகுதியில் 15 அடி ஆழத்துக்கும் அதிகமாக மண் எடுத்து வருவதால் அப்பகுதி விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று மணிமங்கலம் ஈஸா ஏரி. இந்த ஏரி, மலைப்பட்டு, சேத்துப்பட்டு, மணிமங்கலம் கரசங்கால் வரை 7 கிலோமீட்டர் நீளம் உடையது.

இந்த ஏரிக்கு, மலைப்பட்டு மலையில் இருந்து வரும் ஊற்றுநீர் மற்றும் மகாரண்யம், குண்டுபெரும்பேடு, அழகூர், நல்லாம்பெரும்பேடு ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி கலங்கல் வழியாக வரும் உபரிநீர் மலைப்பட்டு, சேத்துப்பட்டு, மணிமங்கலம் வழியாக கரசங்கால் பகுதிக்கு வந்துசேரும்.

கரசங்கால்- மணிமங்கலம், சேத்துப்பட்டு- மலைப்பட்டு வரையில் உள்ள ஏரியில் மழைநீர் நிரம்பினால்தான் கரசங்கால், சேத்துப்பட்டு, மலைப்பட்டு பகுதிகளில் உள்ள கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறி அடையாறு ஆற்றில் கலக்கும்.

இந்நிலையில் இந்த ஏரி நீரைப் பயன்படுத்திதான் 1500 ஏக்கர் பரப்பளவில் மலைப்பட்டு, சேத்துப்பட்டு, மணிமங்கலம், கரசங்கால் ஆகிய பகுதிகளில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த ஏரி நீரைப் பயன்படுத்திதான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதிகளில் மூன்று போகமும் விவசாயம் நடைபெற்று வந்தது.

கடந்த சில ஆண்டுகளாக இந்த ஏரியில் மண் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு 30 அடி வரை மண் எடுக்கப்பட்டு ஆழப்படுத்தப்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாகவே ஏரி நிரம்புவதில்லை.

இதனால் தற்போது இப்பகுதிகளில் ஒருபோகம் மட்டுமே விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஏரியில் மீண்டும் மண்குவாரிக்கு அரசால் அனுமதி வழங்கப்பட்டு கடந்த 30 நாள்களுக்கும் மேலாக மண்குவாரி செயல்பட்டு வருகிறது.

மண்குவாரி, ஏரிக்கரையின் ஒருபகுதியில் செயல்படுவதால் அங்கு அரசு நிர்ணயம் செய்த அளவைவிட 15 அடி ஆழத்துக்கும் மேலாக பல பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக மண் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் வரும் காலங்களில் ஏரிக்கு வரும் மழைநீர் தடை செய்யப்படுவதோடு ஏரி நிரம்பாத நிலை ஏற்படும்.

இதனால் ஏரி நீரைப் பயன்படுத்தி செய்யப்படும் விவசாயம் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில் "ஏரிக்கரையின் ஒருபகுதியில் மண்  எடுக்கப்பட்டு வருவதால் ஏரிக்கு வரும் மழைநீர் மண் குவாரியில் ஏற்படுத்தப்படும் பள்ளங்களிலே நின்றுவிடும்.

இதனால் ஏரி நிரம்பாத சூழல் ஏற்படும். இதையடுத்து ஏரிக்கரையில் உள்ள மதகுகள் மூலமாக விவசாய நிலத்துக்கு ஏரி நீரை எடுத்துச் செல்ல முடியாது. இதனால் விவசாயத்தையே நம்பியுள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

எனவே குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக மண் எடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் மணிமங்கலம் ஏரியில் மண் குவாரி அமைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கக் கூடாது' என்றார் அவர்.

இது குறித்து மாவட்ட கனிமவளத் துறை துணை இயக்குநர் அய்யாதுரையிடம் கேட்டதற்கு "பொதுவாகவே மண்குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும்போது ஒரு மீட்டர் ஆழம் வரை மட்டுமே மண் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது.

மணிமங்கலம் ஏரியில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 15 அடிகளுக்கு மண் எடுக்கப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →