முகப்பு
தமிழ்நாடு

ஆலங்குடி அருகே நஞ்சு கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியை இயக்கும் தொழிலாளி சாவு:சாவில் சந்தேகமென உறவினர்கள் சாலை மறியல்

ஆலங்குடி அருகே மர்ம நபர்களால் நஞ்சு கலக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இயக்கும் தொழிலாளி தூக்கில் பிணமாக தொங்கினார்.அவரது சாவில் சந்தேகம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:33 AM
பகிர்:

ஆலங்குடி அருகே மர்ம நபர்களால் நஞ்சு கலக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இயக்கும் தொழிலாளி தூக்கில் பிணமாக தொங்கினார்.அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆலங்குடி அருகே கோவிலூர் ஊராட்சிக்கு உள்பட்ட தெற்கு மேலக்கோட்டையில்  உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 16-ம் தேதி மர்ம நபர்கள் குருணை மருந்தை கலந்தவிட்டனர்.

அந்தக் குடிநீரை உபயோகப்படுத்திய அந்த ஊரைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  சிகிச்சை பெற்றனர் .

இதுகுறித்து தனிப்படைகள் அமைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில்  நஞ்சு கலந்த குடிநீர் தொட்டியியை நீண்ட காலமாக இயக்கும் வேலை பார்த்து வந்தவர் அதே ஊரைச்சேர்ந்த முத்துச்சாமி மகன் வெள்ளைச்சாமி(35).இவருக்கு ராணி(30)என்ற மனைவியும், யோகேஷ்வரன் (9) ரோகினி(9) ,சத்யா (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த  வெள்ளைச்சாமியை அதிகாலையில் அவரது மனைவி எழுந்து பார்த்த போது காணவில்லையாம்.இதையடுத்து அவரை தேடியபோது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் வெள்ளைச்சாமி தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்துள்ளார்.

 அவரது கால்பகுதியில் ரத்தக்காயங்கள் இருந்ததால் வெள்ளைச்சாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் கோவிலூர் 4 பிரிவு சாலை கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு வந்த ஆலங்குடி காவல் துணைக்கண்காணிப்பாளர் சொக்கநாதன், வட்டாட்சியர் வெங்கடாஜலம் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் யாரும் அங்கிருந்து  கலைந்து செல்ல மறுத்ததால் தடியடி நடத்தி மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதையடுத்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.எஸ்.உமா சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.மேலும் தடயவியல் நிபுணர் மஞ்சுளா தடயங்களை சேகரித்தார்.

இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள ஆலங்குடி போலீஸார் வெள்ளைச்சாமி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது உண்மை தெரிந்துவிடும் என்பதால் குடிநீர்த்தொட்டியில் நஞ்சை கலந்த மர்ம நபர்கள் அவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மறியலால் புதுக்கோட்டை-ஆலங்குடி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →