முகப்பு
தமிழ்நாடு

சீசன் முடியும் முன்பே வெறிச்சோடிய வேடந்தாங்கல் சரணாலயம்

வேடந்தாங்கல் ஏரியில் நீர் இல்லாத காரணத்தால், சீசன் முடியும் முன்பாகவே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2014 at 4:02 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:47 AM

வேடந்தாங்கல் ஏரியில் நீர் இல்லாத காரணத்தால், சீசன் முடியும் முன்பாகவே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒன்றாக, திகழ்வது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் கண்டுக் களிக்கும் இடமாக இது இருந்து வருவது சிறப்பு. ஏரிகள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது வேடந்தாங்கல் ஏரி. இங்கு பறவைகள் சரணாலயம் கடந்த 1858-ல் தொடங்கப்பட்டது. 75 ஏக்கர் பரப்பளவு கொண்டது வேடந்தாங்கல் ஏரி. ஏரியின் நடுவே 50-க்கும் மேற்பட்ட கருவேல மரங்கள், கடம்ப மரங்கள், செடி, கொடிகள் உள்ளன. அந்த மரங்களின் மேல் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்ய உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன.

இனப்பெருக்கத்துக்கு சாதகமான பருவ நிலை, நீர், உணவு, மரங்கள், பாதுகாப்பான சூழல் போன்ற காரணங்களால் பறவைகள் இங்கு வருகின்றன. வேடந்தாங்கல் ஏரியைச் சுற்றி மதுராந்தகம் ஏரி, கருங்குழி ஏரி உள்ளிட்ட ஏரிகள் அரணாக உள்ளன.

Advertisement

சைபிரியா, இலங்கை, மத்திய ஆசியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், மங்கோலியா, வங்காளதேசம் போன்ற வெளிநாடுகளில் இருந்தும், இந்திய நாட்டின் வடமாநிலங்களில் இருந்தும் பறவைகள் என பல்லாயிரக்கணக்கான மைல்களைத் தாண்டி இங்கு வந்து தங்கிச் செல்கின்றன.

சிறிய நீர்காகம், பாம்புதாரா, கரண்டிவாயன், நத்தைக்குத்தி நாரை, சாம்பல் நாரை, வெள்ளை அரிவால்மூக்கன், கூழைகடா, வெள்ளை கொக்கு, உண்ணிகொக்கு, வக்கா, சீரவி, புள்ளிவாத்து, நாராயணபட்சி, குருட்டுக் கொக்கு, ஊசிவால்வாத்து, மஞ்சள்மூக்கு நாரை போன்ற பறவைகள் சரணாலயத்தை அலங்கரித்து வருகின்றன.

இந்த ஏரியை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இருப்பதால், விளைநிலங்களில் பயிரிடப்படும் நெல், பருப்பு வகைகளையும், நீர் நிலைகளில் வாழும் மீன், புழுப் பூச்சிகள் என்று சரணாலயத்தில் முகாமிடும் பறவைகளுக்கு உணவு பஞ்சமிருக்காது.

ஏரி நீரில் விழும் இப்பறவைகளின் எச்சம் மிகச் சிறந்த உரமாக வேடந்தாங்கல் பாசன நிலங்களுக்குப் பயன்படுவதால் இப்பகுதி விவசாயிகள் நல்ல விளைச்சலை பெறுகின்றனர்.

வற்றும் ஏரிகள்-பறவைகள் ஏமாற்றம்: அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பறவைகளின் இந்த சீசன் தற்போது குறைய ஆரம்பித்துள்ளது. பறவைகளின் வருகை மற்றும் அவை தங்குவது குறித்தான எதிர்பார்ப்பை ஏமாற்றும் வகையில் இந்தாண்டு சீசன் முடியும் முன்னரே சரணாலயம் பறவைகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. சீசன் காலங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வருவது வழக்கம். தற்போது பருவமழை பொய்த்ததன் காரணமாக ஏரியில் போதுமான நீர் இல்லாத நிலையில் தற்போது 5000 பறவைகளே உள்ளன. இருக்கின்றன. அதனால் பார்வையாளர்கள் வருகையும் குறைந்த வருகிறது.

சென்னை வன உயிரியல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டின்கீழ் இச் சரணாலயம் இயங்கி வருகிறது. பறவைகள் குறைந்து வருவதைக் குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், போதிய மழை இல்லாததால் இங்குள்ள ஏரிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. மழை பெய்தால்தான் சீசன் ஏப்ரல் வரை நீடிக்கும்.

இல்லை என்றால் மார்ச் மாதத்திலேயே முடிந்துவிடும். பறவைகளுக்காக நாங்களும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறாம்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.