தாமிரவருணியை பாதுகாக்க சிறப்பு நிதி கோரி நெல்லையில் எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்
ஆக்கிரமிப்புகள், பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள், ஆலைக் கழிவுகளால் மாசுபட்டு வரும் தாமிரவருணி நதியை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி
ஆக்கிரமிப்புகள், பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள், ஆலைக் கழிவுகளால் மாசுபட்டு வரும் தாமிரவருணி நதியை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. சார்பில் வெள்ளிக்கிழமை பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் உற்பத்தி ஆகி தமிழகத்தை வளப்படும் வற்றாத ஜீவநதி தாமிரவருணி ஆக்கரமிப்புகளாலும், பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள், ஆலைக் கழிவுகளாலும் மாசுபட்டு வருகிறது. தென்மாவட்ட குடிநீர், பாசனத்திற்கு ஆதாராமாக விளங்கும் இந்நதியை பாதுகாக்க மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
நதிக்கரையில் அதிகரித்து வரும் செங்கல்சூளைகளை அகற்ற வேண்டும். நதியில் மணல் எடுக்க தடை இருந்தபோதிலும் மணல் எடுக்கப்பட்டு வருவதை தடுக்க போதிய நடவடிக்கை இல்லை. ஆகவே தாமிரவருணி நதியை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ. உஸ்மான்கான் பேசியதாவது: தாமிரவருணியில் இருந்து மணல் எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள போதிலும் தொடரும் மணல் திருட்டை அதிகாரிகள் கண்டு கொள்ளவதில்லை. நதியை பாதுகாக்க மாநில அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். நதியை பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது. தாமிரவருணி நதியை பாதுகாப்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றார் அவர்.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் வீரை ஜிந்தா தலைமை வகித்தார். தாமிரவருணி பாதுகாப்பு இயக்கத் தலைவர் ஜோசப்கென்னடி, தாமிரவருணி இயற்கை வளபாதுகாப்பு அமைப்பின் தலைவர் எஸ். சுப்பிரமணியமழவராயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின், மாநில பொதுச்செயலர் வி.எம்.எஸ். முகம்மதுமுபாரக், மாவட்டத் தலைவர் பிஸ்மிகாஜா, மாவட்ட செயலர்கள் ஹயாத்முகம்மது, பக்கீர்முகம்மது, பொருளாளர் சாதிக், தொழிற்சங்கத் தலைவர் நசீர்கான், செயற்குழு உறுப்பினர்கள் அக்பர், மஜித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.