காட்டுமன்னார்கோயில் அருகே டாஸ்மாக் மதுபானக்கடை சூறை: 12 பேர் மீது வழக்குப் பதிவு
காட்டுமன்னார்கோயில் அருகே நாட்டார்மங்கலம் கிராமத்தில் சனிக்கிழமை காலை அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபானக்கடையை பொதுமக்கள் உடைத்து சூறையாடினர். இதுகுறித்து காட்டுமன்னார்கோயில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 12 பேரை கைது செய்துள்ளனர்.
காட்டுமன்னார்கோயில் அருகே நாட்டார்மங்கலம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபானக்கடையை பொதுமக்கள் உடைத்து சூறையாடினர். இதுகுறித்து காட்டுமன்னார்கோயில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 12 பேரை கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக் கோரி ஊராட்சி மன்றத் தலைவர் சுதா மணிரத்தினம் தலைமையில் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பூரண மதுவிலக்கு கோரி போராடிய சசிபெருமாள் இறந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை ஊர் பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்று கடையை உடைத்து உள்ளே புகுந்து மதுபாட்டில்களை சாலையில் போட்டு உடைத்து சூறையாடினர். தகவல் அறிந்த காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் மைக்கேஸ் இருதயராஜ், உதவிஆய்வாளர் கந்தசாமி மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் பெண்கள் உள்ளிட்ட ஊர் மக்கள் மதுபானக்கடையை அகற்ற வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் அவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டாஸ்மாக் மதுபானக்கடையை சூறையாடப்பட்டது குறித்து கடை விற்பனையாளர் தனசுராமன் அளித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோயில் போலீஸார் ஊராட்சி மன்றத் தலைவர் சுதாமணிரத்தினம், மணிரத்தினம், அவரது மகன் கமல் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடையை சூறையாடியதாக வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக 5 பெண்கள் உள்ளிட்ட 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.