கீரமங்கலம் அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். கீரமங்கலத்தில் இருந்து மேற்பனைக்காடு செல்லும் சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அந்தச்சாலை பல ஆண்டுகளாக பராமரிப்பு செய்யப்படாமல் உள்ளதால் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால்,அந்த கிராம மக்கள், பள்ளி, கல்லூரி செல்வோர் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லையாம். இந்நிலையில், அப்பகுதியில் சில தினங்களாக பெய்துவரும் மழையினால் சாலைப் பள்ளங்களில் மழை நீர் தேங்கி குட்டை போல் ஆனதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மேற்பனைக்காடு பேட்டை கடைவீதியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு சென்ற அறந்தாங்கி வட்டாட்சியர் முருகேசன், கீரமங்கலம் போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தபின் மறியல் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால் கீரமங்கலம்- மேற்பனைக்காடு சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. -அ.பார்த்திபன், ஆலங்குடி.