மே வெளியீட்டில் கருப்பு?
கருப்பு திரைப்படத்தின் வெளியீடு குறித்து...
நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் வெளியீட்டில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நடிகர் சூர்யாவுக்கே இந்த நிலைமையா? என அவரின் ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய கருப்பு ஒவ்வொரு மாதமாகத் தள்ளித், தள்ளி தற்போது ஏப்ரல் வெளியீடாக திரைக்கு வருமென கூறப்படுகிறது.
இப்படத்தின் இயக்குநரான ஆர்ஜே பாலாஜியும் எப்போது வெளியாகும் என்கிற குழப்பத்தில் இருப்பது அவரின் பேச்சைக் கேட்டாலே தெரிகிறது.
இன்னொரு புறம், கங்குவா, ரெட்ரோ ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றதால் கருப்பு திரைப்படம் வெற்றி பெற வேண்டுமென சூர்யா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இச்சூழலில், கருப்பின் ஓடிடி உரிமம் விற்காதது, வேறு சில காரணங்கள் என ஊகங்கள் அடிப்படையிலேயே படம் வெளியாகுமா ஆகாதா? எனக் கேள்விகள் வலுத்து வருகின்றன. இப்படத்திற்குப் பின் தயாரான சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் டீசர் வெளியானதுடன் அப்படம் வெளியீட்டுக்குத் தயாராகவே உள்ளது.
இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தை மே 15 ஆம் தேதி திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே மாதத்திற்குள் வெளியாகவில்லை என்றால் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் கருப்புக்கு முன் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.