முகப்பு
தமிழ்நாடு

நெல்லையில் ஒரே நாளில் கடைகள், வீடுகளில் நகை, பல லட்சம் திருட்டு; பொதுமக்கள் அச்சம்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 கடைகள் மற்றும் பூட்டியிருந்த வீட்டில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள நகைகள், பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:45 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 கடைகள் மற்றும் பூட்டியிருந்த வீட்டில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள நகைகள், பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பாளையங்கோட்டையில் மனகாவலம்பிள்ளைநகரில் சஞ்சய்காந்தி தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் கணேஷ் (34). எலக்ட்ரிக்கல் பணி செய்து வருகிறார். இவர் மனைவி சூர்யகலா (30). முக்கூடல் அருகே பாப்பாக்குடியில் சூர்யகலாவின் தந்தை வீட்டில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணியினை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு கணேஷ், தனது மனைவியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றாராம்.

புதன்கிழமை வீடு திரும்பிய கணேஷ் அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் மேற்கூரை உடைந்து காணப்பட்டது. வீட்டிலிருந்த பீரோவை உடைத்து மர்மநபர்கள் அதிலிருந்த  42 கிராம் எடையுள்ள தங்கநகைகள், ரொக்கப் பணம் ரூ. 3500 ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும்.

சேரன்மகாதேவி அருகே காருக்குறிச்சியில் பிரதான சாலையில் 20 க்கும் மேற்பட்ட வியாபாரக் கடைகள் உள்ளன. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இங்குள்ள 7 கடைகளை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடியது தெரியவந்தது.

செட்டிப்பிள்ளைமார் தெருவை சேர்ந்த மோகன் கடையில் இருந்து ரூ. 4 ஆயிரம், பாக்கியராஜ் என்பவரின் பலசரக்கு கடையில் ரூ. 40 ஆயிரம், ராமகிருஷ்ணனின் காய்கறி கடையில் ரூ. 20 ஆயிரம், சண்முகசுந்தராஜன் கடையில் இருந்து ரூ.70 ஆயிரம், உள்பட 7 கடைகளில் ஒரே நாளில் பணம் திருடப்பட்டது குறித்து வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் முத்துராஜ், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் திருட்டு நடைபெற்ற கடைகளை பார்வையிட்டனர். போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல் சேரன்மகாதேவி அருகே கங்கனாங்குளம் அந்தோணிநகரில் முருகன் (50) என்பவரின் செல்லிடப்பேசி கடையினை மர்ம நபர்கள் உடைத்து சுமார் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை திருடி சென்றதும் தெரியவந்தது. சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்த நிகழ்ந்த திருட்டு சம்பவத்தால் பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →