நெல்லையில் நீடிக்கும் மழை: தாமிரவருணியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
திருநெல்வேலி மாவட்டத்தில் மழை நீடித்து வருவாதல் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து சனிக்கிழமை 7 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டதால் தாமிரவருணி ஆறறில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மழை நீடித்து வருவாதல் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து சனிக்கிழமை 7 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டதால் தாமிரவருணி ஆறறில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக இருந்து வருகிறது. அணைகளின் நீர்வரத்தை பொறுத்து பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறக்கப்படுகிறது.
சனிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி, மணிமுத்தாறு அணையில் 445 கனஅடி, கடனாநதி அணையில் 1200 கனஅடி, ராமநதி அணையில் 300 கனஅடியும் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதாலும், பாபநாசம் கீழ் அணை, பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் பகுதியில் மழை பெய்ததாலும் தாமிரவருணி சுமார் 8 ஆயிரம் கனஅடி செல்கிறது. இதனால் தாமிரவருணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை-45, பாபநாசம் கீழ் அணை-26, சேர்வலாறு அணை-23, மணிமுத்தாறு அணை-19.6, கடனாநதி அணை-50, ராமநதி அணை-25, கருப்பாநதி அணை-15, குண்டாறு அணை-16, அடவிநயினார் அணை-3, நம்பியாறு அணை-2, கன்னடியன் அணைக்கட்டு-10.6.
இம்மாவட்டத்தில் பிற பகுதியில் பதிவான மழை: பாளையங்கோட்டை-8.2, திருநெல்வேலி-8.2, அம்பாசமுத்திரம்-27.5, சேரன்மகாதேவி-6, சங்கரன்கோவில்-7, சிவகிரி-22.8, தென்காசி-13, செங்கோட்டை-11, ஆலங்குளம்-45.2, நான்குனேரி-11, களக்காடு 2.2.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2163.09 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 343 கனஅடி, கடனாநதி அணைக்கு 1200 கனஅடி, ராமநதி அணைக்கு 300 கனஅடி, கருப்பாநதி அணைக்கு 278 கனஅடி, வடக்குப் பச்சையாறு அணைக்கு 100 கனஅடி, நம்பியாறு அணைக்கு 208 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
நீர்மட்டம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம்-141.60 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம்-146.34 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம்-116.90 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம்-83.50 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம்-82.25 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம்-70.86 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம்-132 அடி, வடக்குப் பச்சையாறு அணை நீர்மட்டம்-50 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம்-22.96 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம்-52.50 அடியாகவும் இருந்தது.
நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் சனிக்கிழமையும் மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, கல்யாணதீர்த்த அருவிகளில் வெள்ளம் நீடித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.