பாகுபலி திரைபடம் தடை செய்யக் கோரி நெல்லையில் திரையரங்கு முற்றுகை: 21 பேர் கைது
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை பாகுபலி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி திரையரங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியினர் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை பாகுபலி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி திரையரங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியினர் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் பாகுபலி திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் இறுதிக் காட்சியில் பகடை என புனைப்பெயரில் அழைக்கப்படும் அருந்ததியர் சமுதாயம் குறித்து அவதூறாக வசனங்கள் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ஆகவே பாகுபலி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆதித்தமிழர் கட்சியினர் வெள்ளிக்கிழமை திருநெல்வேலி நகரில் உள்ள ரத்னா திரையரங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் இரா. இளஞ்செழியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கு.க. கலைக்கண்ணன் முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணி செயலர் மு. கதிரவன், மாவட்டத் தலைவர் காலேப், மாவட்ட அமைப்புச் செயலர் கருமுகிலன், மாவட்ட கொள்கைபரப்பு செயலர் வீரபாண்டியன், மாவட்ட இளைஞரணி செயலர் சண்முகம், மாவட்ட மகளிரணி செயலர் மீனாட்சி மற்றும் 2 பெண்கள் உள்பட 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.