தள்ளிவிட்டால்தான் ஓடும் அரசுப் பேருந்துகள்..!
தள்ளிவிட்டால்தான் ஓடும் அரசுப் பேருந்துகள்..!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் பொன்னேரி பணிமனையில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகளை பயணிகள் தள்ளிவிட்டால்தான் இயங்கும் நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி நகரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்கரைச் சுற்றிலும் உள்ள 200-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
பேருந்து போக்குவரத்தையே நம்பியுள்ள கிராம மக்கள் பொன்னேரியில் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களும், 5 நீதிமன்றங்களும், கல்வி நிலையங்களும் அமைந்துள்ளன. எனவே, சுற்றுப்புறக் கிராம மக்கள் பொன்னேரிக்கு அரசுப் பேருந்துகளில் நாள்தோறும் பயணித்தே பொன்னேரிக்கு வருகின்றனர்.
பொன்னேரியைச் சுற்றிலும் பழவேற்காடு, மெதூர், தேர்வாய், பனப்பாக்கம், இலுப்பாக்கம், தத்தைமஞ்சி, கடப்பாக்கம், செங்களூநீர்மேடு, மீஞ்சூர், உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் பொன்னேரியில் இருந்து இயக்கப்படும் பேருந்து போக்குவரத்தையே நம்பி உள்ளனர்.
பழுதான பேருந்துகளே இயக்கம்!
பொன்னேரி பணிமனையில் இருந்து திருவள்ளூர், கோயம்பேடு, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 60-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் மேற்கண்ட கிராமப் பகுதிகளுக்கு ஓட்டை, உடைசல் நிலையில் உள்ள பழுதான பேருந்துகளே இயக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் சில பேருந்துகள் பேருந்து நிலையத்திலேயே பயணிகள் கீழே இறங்கி தள்ளினால் இயங்கும் நிலை உள்ளது. மேற்கண்ட கிராமங்களுக்கு ஓட்டை, உடைசல் நிலையில் உள்ள பேருந்துகளை இயக்குவதால் அந்த பகுதியில் வசிக்கும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு குறித்த நேரத்துக்கு வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கின்றனர். இதனால் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு நஷ்டமும், பயணிகளுக்கு கூடுதல் செலவினமும் ஏற்படுகிறது.
எனவே, நல்ல நிலையில் இயங்கக்கூடிய பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.