சுவாமி சகஜாநந்தா மணி மண்டபம் வழக்கு தள்ளுபடி: சிதம்பரத்தில் வெடி, வெடித்து கொண்டாட்டம்
சிதம்பரத்தில் சுவாமி சகஜாநந்தா மணி மண்டபம் கட்டுவது சம்பந்தமாக கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரத்தில் சுவாமி சகஜாநந்தா மணி மண்டபம் கட்டுவது சம்பந்தமாக கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் கல்வி பயில வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு சுவாமி சகஜாநந்தா சிதம்பரத்தில் நந்தனார் கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தார். இவர் சட்டப்பேரவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் ஏழை மக்களுக்காக வாழ்க்கையை அர்பணித்த சுவாமி சகஜாநந்தாவுக்கு அவர் வாழ்ந்த இடமான நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மணி மண்டபம் கட்ட வேண்டும் என கோரிகை விடுத்தார். இக்கோரிக்கையை ஏற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ 1 கோடியில் மணி மண்டபம் கட்ட ஆணை பிறப்பித்தார்.
இதனை தொடர்ந்து அப்போதைய சிதம்பரம் உதவிஆட்சியராக இருந்த சுப்பிரமணியன் மணி மண்டபம் கட்ட இடத்தை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார். பின்னர் மண்டபம் கட்ட அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றபோது சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிய நடராஜன் என்பவர் மணி மண்டபம் அமைக்க உள்ள இடம் தனக்குகு சொந்தமானது என கடலூர்மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை சகஜாநந்தா மணி மண்டப ஒருங்கினைப்பு குழு எதிர்கொண்டு நடத்திவந்தது.
பின்னர் கடந்த ஓராண்டுக்கு மேலாக வழக்கு நடைபெற்று வந்ததால், மணி மண்டபம் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வழக்கை விரைவில் முடித்து மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் சிதம்பரம் காந்தி சிலையில் அனைத்து கட்சியை கூட்டி ஒருநாள் உன்னாவிரதப் போராட்டம் நடத்தினார். இந்நிலையில் கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து மார்ச் 17-ந்தேதி மாவ்ட முதன்மை நீதிபதி குமரகுரு, வழக்கு தொடுத்த நடராஜனுக்கு மணிமண்டபம் அமையவுள்ள இடம் அவருக்குறியதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் வழக்கை தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார்.
இதனை அறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்க்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம், நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், மாவட்டக்குழு வெங்கடேசன், கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் பி.வாஞ்சிநாதன், குமராட்சி ஒன்றியச் செயலாளர் ராம்மூர்த்தி உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியினர்,மணி மண்டப ஒருங்கினைப்புக்குழு நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், பன்னீர்செல்வம், பாலையா உள்ளிட்டோர் ஒமக்குளம் உள்ள நந்தனார் மடம் அருகே வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.