முகப்பு
தமிழ்நாடு

புத்தகப் பைகள், காலணிகள் விலை உயர்வு

தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை திறக்கப்படவுள்ள நிலையில்,

Updated On : 1 ஜூன், 2015 at 3:29 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:09 AM

தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை திறக்கப்படவுள்ள நிலையில், சென்னையில் புத்தகப் பைகள், காலணிகள் போன்றவை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளன.
 கோடை விடுமுறை முடிவடைந்து புதிய கல்வியாண்டில் வகுப்பை தொடர ஆர்வமுடன் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்படும் புத்தகப் பைகளும், விதவிதமான காலணிகளும் அழகு சேர்க்கின்றன.
 புத்தகப்பை தயாரிக்கும் நிறுவனங்களும், மொத்த, சில்லறை விற்பனையாளர்களும் மாணவர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு ஆண்டுதோறும் விதவிதமான வண்ணங்களிலும், வித்தியாசமான வடிவமைப்பிலும் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.
 தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் புத்தகப் பைகள், காலணிகளின் விற்பனை முன்கூட்டியே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.
 கார்ட்டூன் பைகள்: சென்னையைப் பொருத்தவரை தியாகராயநகர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், பெரம்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள புத்தகப்பை, காலணிகள், நோட்டுப் புத்தகங்கள் கடைகளில் கடந்த சில நாள்களாக மாணவர்கள், பெற்றோர் கூட்டம் காணப்படுகிறது.
 எல்.கே.ஜி. முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் "பென்டென்', "டோராபுஜ்ஜி', "மிக்கிமவுஸ்' போன்ற கார்ட்டூன் சித்திரங்கள் அச்சிடப்பட்ட புத்தகப் பைகளை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
 அது போன்ற பைகள் தரத்திற்கேற்றவாறு ரூ.250 முதல் ரூ.600 வரை விற்கப்படுகின்றன. அதேபோல் இடைநிலை, உயர்நிலை வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு ரூ.400 முதல் ரூ.850 வரை புத்தகப் பைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
 இரட்டை தையல், பிராண்ட், வடிவமைப்பு, உத்தரவாதம் ஆகியவற்றை பொருத்து விலை அதிகரிக்கிறது. இது போன்ற புத்தகப் பைகள் ரூ.500 முதல் ரூ.1,500 வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.
 மூலப் பொருள்கள் விலை உயர்வு: கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு புத்தகப்பைகளின் விலை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.
 இது குறித்து ராயபுரத்தில் உள்ள புத்தகப் பை தயாரிக்கும் நிறுவனத்தைச் சேர்ந்த மனோஜ் திவாரி கூறுகையில்,
 புத்தகப் பைகளைத் தேர்வு செய்வதில் மாணவர்கள், பெற்றோரின் ரசனை ஆண்டுதோறும் மாறி வருகிறது.
 தற்போது சென்னை, மும்பை போன்ற உள்நாட்டில் கிடைக்கும் மூலப் பொருள்களால் தயாரிக்கும் பைகளை விட தைவான், சீனா போன்ற வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் மூலப்பொருள்கள் மூலம் தயாரிக்கப்படும் பைகளையே குழந்தைகள் விரும்புகின்றனர்.
 புத்தகப் பைகள் தயாரிக்கப்படும் "ரெக்ஸின்', "நைலான்', "ஜிப்' போன்ற மூலப்பொருள்களின் விலையும், தையல் கூலியும் வெகுவாக அதிகரித்துள்ளது. பைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரெக்ஸின் ஒரு மீட்டர் ரூ.90 முதல் ரூ.300 வரை தரத்துக்கு ஏற்றவாறு மாறுபடும். விலை அதிகமான மூலப்பொருள்களால் தயாரிக்கப்படும் புத்தகப் பைகள் நீட்டித்து உழைக்கும் தன்மை கொண்டவை.
 புத்தகப் பை தயாரிக்க கடந்த ஆண்டில் பள்ளிகள் மூலம் அதிக "ஆர்டர்கள்' பெறப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்த "ஆர்டர்கள்' கிடைக்கவில்லை. அதனால் உற்பத்தி சற்று குறைந்துள்ளது என்றார் அவர்.
 புதிய ரக காலணிகள்: இதேபோல் பள்ளி மாணவர்கள் அணியும் "செல்குரோ', "லேஸ்', "சின்தெடிக் லெதர்' உள்பட பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்பட்ட காலணிகள் (ஷூ) சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரத்யேக ஷோரூம்கள், கடைகளில் ரூ.400 முதல் ரூ.900 வரை விற்கப்படுகின்றன. மேலும் சர்வதேச தரத்தில் தயாரிக்கப்பட்ட புதியரக காலணிகளும் விற்பனைக்கு வந்துள்ளன.
 இது போன்ற காலணிகள் ரூ.700 முதல் ரூ.1,600 வரை விற்கப்படுகின்றன. இவற்றின் விலையும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.