கடலூரில் அதிமுக நிர்வாகி மர்ம கும்பலால் வெட்டிக் கொலை
கடலூரில் அதிமுக நிர்வாகி இன்று அதிகாலை மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கடலூரில் அதிமுக நிர்வாகி இன்று அதிகாலை மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் துறைமுகம் சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பி.சிவா(36), மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர் கடலூர் நகர 38வது வார்டு பிரதிநிதியாகவும் செயல்பட்டு வந்துள்ளார். ஊரின் முக்கிய பிரமுகரான இவர் அப்பகுதியினரிடையே ஏற்படும் சிறு, சிறு பிரச்னைகளை சமரசம் செய்து வைப்பதாகக் கூறப்படுகிறது.
அதேப்போன்று சலங்கைநகர் பகுதியைச் சேர்ந்த சாந்தன் என்பவர் சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் தவறான உறவு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை சிவா கண்டித்ததாகத் தெரிகிறது. இதில், சிவாவிற்கும், சாந்தனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிவா மீன்பிடிப்பதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் சிங்காரத்தோப்பு பாலத்தின் கீழே சென்று படகினை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று சிவாவை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடியது. இதில், பலத்த காயமுற்ற சிவா சம்பவ இடத்திலேயே உயரிழந்தார்.
தகவலறிந்த காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சிவாவின் சகோதரர் பி.பஞ்சமூர்த்தி(41) கொடுத்த புகாரின் பேரில் சலங்கைநகரைச் சேர்ந்த சாந்தன், சோனாங்குப்பத்தைச் சேர்ந்த அஜய், பிரபாகரன், தமிழ், கௌதம் ஆகியோர் மீது கடலூர் துறைமுகம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.