முகப்பு
தமிழ்நாடு

விருதுநகரில் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 1248 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

விருதுநகர் மாவட்ட புதுவாழ்வு திட்டம் மற்றும் மக்கள் வாழ்வாதார இயக்கம் சார்பில் இன்று நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 1248 பேர் தேர்வு செய்யப்பட்டு பணிநியமன ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

Updated On : 10 அக்டோபர், 2015 at 8:02 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:26 PM

விருதுநகர் மாவட்ட புதுவாழ்வு திட்டம் மற்றும் மக்கள் வாழ்வாதார இயக்கம் சார்பில் இன்று நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 1248 பேர் தேர்வு செய்யப்பட்டு பணிநியமன ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

விருதுநகர் கேவிஎஸ் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.

இதில், வருவாய் துறை அமைச்சர் பேசுகையில், இளைஞர்கள் பயனடையும் வகையில் தொலைநோக்கு பார்வையோடு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.  பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகள் தொழில்நுட்பங்களை கற்று எளிதாக வேலைவாய்ப்பு பெறும் வகையில் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதுவாழ்வு திட்டம், மக்கள் வாழ்வாதார திட்டம் மூலம் கிராமங்களி்ல் வறுமை ஒழிப்பு சங்கங்கள் தொடங்கப்பட்டு, நலிவுற்ற பிரிவினரான விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், முதிர்கன்னிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சமூக மேம்பாட்டிற்காக கடந்தாண்டு ரூ.2.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

Advertisement

செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் பேசுகையில், இளைஞர்கள் தங்களின் தொழில் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் தொழிற் பயிற்சியும் அளிக்கப்பட்டு, 2 முறை வேலைவாய்ப்பு முகாமும் நடத்தி வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இம்முகாமில் 30-க்கும் மேற்பட்ட பிரசித்திபெற்ற நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களை தேர்வு செய்ய இருக்கின்றனர். இதன் மூலம் இளைஞர்கள் குறிப்பிட்ட பணிகளை தேர்வு செய்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இம்மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள், பெண்கள்  வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர். அதில், பல்வேறு நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1248 பேருக்கு நியமன ஆணையை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

இம்முகாமில், விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன், மாவட்ட  ஊராட்சி துணைத் தலைவர் ஜி.சுப்பிரமணியன், மகளிர் திட்ட அலுவலர் விஜயலட்சுமி, ஒன்றியக்குழு தலைவர்கள் கி.கலாநிதி(விருதுநகர்), வேலாயுதம்(சாத்தூர்), துணைத்தலைவர் மூக்கையா, நகராட்சி துணைத்தலைவர் மாரியப்பன், நகராட்சி உறுப்பினர் நயினார்முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.