அரசு நூலகங்களுக்கு தினமணி அப்துல்கலாம் சிறப்பு மலர்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு நூலகங்களுக்கு தினமணி சார்பில் வெளிடப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமின் சிறப்பு மலர் புத்தகங்களை தினமணியின் தீவிர வாசகரும், புதுகை அரசு மன்னர் கல்லூரியின் வரலாற்றுத்துறை முன்னாள் பேராசிரியருமான சா. விஸ்வநாதன் நன்கொடையாக நூலக அலுவலரிடம் வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு நூலகங்களுக்கு தினமணி சார்பில் வெளிடப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமின் சிறப்பு மலர் புத்தகங்களை தினமணியின் தீவிர வாசகரும், புதுகை அரசு மன்னர் கல்லூரியின் வரலாற்றுத்துறை முன்னாள் பேராசிரியருமான சா. விஸ்வநாதன் நன்கொடையாக நூலக அலுவலரிடம் வழங்கினார்.
சாமானிய குடும்பத்தில் பிறந்த ஒருவராலும் செயற்கரிய சாதனைகளைச் செய்து காட்ட முடியும் என்பதை உலகுக்கு உணர்த்திவரும், மகாத்மா காந்திக்கு பிறகு இந்தியத்துணைக் கண்டத்தில் இனம், மொழி, மதம், சாதி வேறுபாடுகள், உயந்தவர்- தாழ்ந்தவர், பணக்காரர்- ஏழை, படித்தவர்- பாமரர் போன்ற அத்தனை வேறுபாடுகளையும் கடந்து எந்த ஒரு பிரிவினராலும் கருத்து மாறுபாடின்றி நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட மாமனிதராக வாழ்ந்த அப்துல்கலாமின் நினைவைப் போற்றும் வகையில் அவரைப்பற்றிய பல்வேறு அரிய தகவல்களைக் கொண்ட பெட்டகமாக வெளிவந்துள்ள சிறப்பு மலரை மாவட்டம் முழுதும் உள்ள பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்பட அனைத்துத்தரப்பினரிடமும் கொண்டு சேர்க்க தன்னால் முடிந்ததை வாசகர் என்ற முறையில் செய்துள்ளதாக தெரிவித்தார் முன்னாள் பேராசிரியர் சா. விஸ்வநாதன்.
புதுக்கோட்டையிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட நூலகர் ஆர். செல்லாள் வழிகாட்டுதலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதுநிலை நூலகர் பா. முத்துவிடம் மாவட்டம் முழுதும் உள்ள 91 நூலகங்களுக்குமான தினமணி- அப்துல்கலாம் சிறப்பு மலர் புத்தகங்கள் ஒப்படைக்கப்பட்டது.