நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி
திருநெல்வேலியில் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க குடும்பத்துடன் வந்த இளைஞர் திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருநெல்வேலியில் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க குடும்பத்துடன் வந்த இளைஞர் திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சங்கரன்கோவில் அருகே மணலூர் காலனியை சேர்ந்தவர் மாடசாமி (35). இவர் தனது மனைவி சித்ரா, சகோதரிகள் பத்திரகாளி, சங்கரேஸ்வரி ஆகியோருடன் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் மனு அளிக்க திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
திடீரென மாடசாமி, தான் வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி கொண்டு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் அரங்கை நோக்கி ஓடினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்து போலீஸார் மாடசாமியை தடுத்தனர். விசாரணைக்காக போலீஸார் அவரை பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது அவர் கூறியதாவது: நான் மாற்றுத்திறனாளி. தாய், தந்தையர் மற்றும் மனைவி, குடும்பத்தினருடன் வசித்து வருகிறேன். சில மாதங்களுக்கு முன் மற்றொரு பிரிவை சேர்ந்தவர்கள் சிலர் என்னை அவதூறாக பேசி தாக்கி, மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். மீண்டும் எனக்கு மிரட்டல் விடுத்தனர். இதனால் ஊரை விட்டு வெளியேறி சென்னையில் வேலை செய்து வந்தேன். சனிக்கிழமை மனைவி, பெற்றோரை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்தேன்.
இதனை அறிந்த அவர்கள் மீண்டும் என்னையும், என் குடும்பத்தினரையும் அவதூறாக பேசியும், மிரட்டலும் விடுத்தனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே என்னையும், என் குடும்பத்தினரை அச்சுறுத்தி வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.