முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பு: புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் புதுச்சேரியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:51 PM
பகிர்:

புதுச்சேரி: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் புதுச்சேரியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து இரவு  பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பெட்ரோல் பங்க்குகள், ஓட்டல்கள் மூடப்பட்டன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னையில் பணிபுரிந்து வரும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஊர் திரும்பியிருந்தனர். அவர்கள் வழக்கமாக திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் பேருந்தில் சென்னைக்கு புறப்பட்டு செல்வது வழக்கம்.

அவ்வகையில் காலை அவர்கள் புதுச்சேரி பேருந்து நிலையத்திற்குச் சென்று பார்த்த போது, பேருந்துகள் ஏதுவும் வரவில்லை. இந்நிலையில் ஜெயலலிதாவின் நிலைப்பாடு குறித்து 24 மணிநேரம் கழித்தே அடுத்த கட்ட தகவல்களை தெரிவிக்க முடியும் என்றும் அப்போலோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து படிப்படியாக பேருந்துகள் இயக்குவது தொடங்கப்பட்டது.

பதட்ட நிலை நீடிப்பு

அதுபோல் காலை 6 மணியளவில் திறக்கப்படும் கடைகளும் 8 மணிக்குப் பின்னரே திறக்கப்பட்டன. அதேசமயம் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

பிற்பகல்  ஒரு மணியளவில் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்போலோ தகவல் வெளியிட்டதை அடுத்து மீண்டும் பல்வேறு இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக புதுச்சேரியிலும் தொடர்ந்து ஒரு விதமான பதட்டமான நிலை நீடித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.