முதல்வர் ஜெயலலிதா மறைவு எதிரொலி: புதுவையில் கடையடைப்பு, பேருந்துகள் ஓடவில்லை
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் புதுவை நகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
புதுச்சேரி : தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் புதுவை நகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திங்கள்கிழமை நள்ளிரவு சிகிச்சை பலனின்றி மறைந்தார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுச்சேரி நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள், லாரிகள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.
குறிப்பாக முக்கிய கடைவீதிகளான நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை, பெரிய மார்க்கெட், முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, லாஸ்பேட்டை, வில்லியனூர் பகுதிகளில் இருந்த மார்க்கெட்டுகள், பாகூர், திருக்கனூர், காலாப்பட்டு என புறநகர்ப்பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.
பள்ளி, கல்லூரிகள், விடுமுறை
முதல்வர் ஜெயலலிலா மறவையொட்டி, புதுச்சேரி நகரில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
புதுச்சேரி பஸ் நிலையத்தில் பஸ்கள் ஓடாததால் பயணிகள் நடமாட்டம் இல்லாத நிலை இருந்தது.
வாகனப் போக்குவரத்தும் மிகக் குறைவாக இருந்ததால் முக்கிய சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பல்வேறு பகுதிகளில் முதல்வர் ஜெயலலிதா படங்களை வைத்து அதிமுகவினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.