முகப்பு
தமிழ்நாடு

சாலைப் பள்ளங்களும் சாமானிய வாகன ஓட்டிகளும்!

Updated On : 12 ஜூலை, 2016 at 12:06 PM
பகிர்:

சென்னையில் இனிவரும் மாதங்களில்  எப்போது வேண்டுமானாலும் மழைக்காலம் தொடங்கலாம், கடந்த வருடம் போல் இந்த வருடமும் கனமழை இருக்கலாம் என்று வானிலை அறிக்கை ஆருடம் சொல்லிக் கொண்டிருக்கிறது.கன மழை குறித்து சரியான முன்னேற்பாடுகள் இல்லாமல் அரசாங்கமும் குறிப்பாக மக்களாகிய நாமும் எச்சரிக்கையற்று செயல்பட்டதால் கடந்த வருட உயிர் மற்றும் பொருட்சேதங்களை சொல்லி மாளாது.எத்தனை இழப்புகள்! நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

இப்போதும் நமது சாலைகளை குறித்து யோசித்துப் பாருங்கள்,இன்னொரு பெரு மழையைத் தாங்கக்கூடிய சரியான சாலை வசதிகள் இன்னமும் நமக்கு வாய்க்கவே இல்லை. புறநகரில் மட்டுமல்ல  மக்கள் நடமாட்டம் மிகுந்த பரபரப்பான பெருநகரின் மையபகுதிகளிலும் சாலைக் கட்டமைப்பு வசதிகளின் நிலை பரிதாபம் தான்.

மேம்பாலங்கள் ஜன நெரிசலைத் தடுக்கின்றன ஆனால்  டிராஃபிக் உச்சத்தில் இருக்கையில் மழையினால் சேதமாகி குண்டும் குழியுமாக பல் இளிக்கும் சாலைகளை நம்பித்தான் பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும், மற்றும்பல இடங்களுக்கும்  பயணம் செய்தாக வேண்டி இருக்கிறது.வேகமாக  வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் சாலையில் குழியோ,பெரும்பள்ளமோ வந்து விட்டால் வாகனம் தூக்கி அடிப்பதில் முதுகும் தண்டுவடமும் வலியில் முனகுவது ஆர்த்தோபிடிக் மருத்துவரை அணுகவேண்டிய நிலை வரும் போது நமக்கு தாமதமாகத் தான் புரியும். இது வாகனம், வாகன ஓட்டி இரண்டுபேருக்கும் நல்லதில்லை.

Advertisement

ஒரு இடத்தில் பள்ளியோ, அபார்ட்மெண்ட்  வீடுகளோ,மருத்துவமனையோ வந்து விட்டது எனில் கண்டிப்பாக அந்த இடம் விரைவில் கணிசமாக மக்கள் புழங்கும் இடமாக மாறி விடும் அப்படிப் பட்ட இடங்களில் அரசாங்கம் வந்து தான் சாலை அமைக்க வேண்டும் என்று காத்திருக்காமல் மக்களாகிய நாமே ஏன் நமக்கான அடிப்படை சாலை மற்றும் கால்வாய் வசதிகளை செய்து கொள்ளக் கூடாது?

சென்ற மழைக்காலத்தில் பொன்னேரி பகுதியில் பிளவு பட்ட சாலையை பொதுமக்களே புனரமைக்கத் தொடங்கினார்கள்.அதற்கு அரசு அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்து மக்களின் நல்லெண்ணத்திற்கு குறுக்கே நின்றதாக தொலைக்காட்சி செய்திகளில் காட்டிக் கொண்டிருந்தார்கள்.பல இடங்களில் மக்கள் மழைச் சேதங்களில் இருந்து மீள அரசு தங்களுக்கு உதவவில்லை என்று தர்ணா செய்து கொண்டிருந்தனர்.தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த மிஸ்டர்.பொதுஜனம் இந்தப் பிரச்சினைக்கு என்ன தான் தீர்வு? என்று குழம்பிப் போனார்.

எல்லா இடங்களிலும் எல்லா நேரமும் அரசாங்கம் வந்து உதவ முடியாது என்பது நிஜம் எனில் பொறுப்புணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கும் மக்களது செயல்களையும் அரசு அதிகாரிகள் தடுப்பது மட்டும் எந்த வகையில் நியாயம்?குறைந்த பட்சம் அடுத்த மழை வந்து சென்னையை முற்றுகை இடுவதற்குள் நமக்கான சாலை வசதிகளை நாம் நிச்சயம் மேம்படுத்தியே ஆக வேண்டும்.

மக்களே முன் வந்து சாலை அமைப்பதும் குற்றம். அரசாங்கமும் மெத்தனமாகத் தான் இருக்கும் எனில் குறைந்தபட்சம் மண் அல்லது சரளைக்கற்களைக் கொண்டு பொது மக்களே பாழான சாலைகளை தற்காலிகமாக சரி செய்து  கொள்வது நல்ல பலனைத் தருகிறது.இருசக்கர வாகன ஒட்டிகளுக்கு முதுகுவலியாவது குறையும்.ஆட்டோ, ஷேர் ஆட்டோ பயணங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.கடந்த வாரம் மழை தொடர்ந்து  பெய்து சில இடங்களில் சாலைகள் குண்டும்,  குழியுமான போது இப்படியான தற்காலிகமான சாலை நிவாரணங்களைப் பார்க்க முடிந்தது.மக்களின் முயற்சியைப் பாராட்டுவோம்!ஆனால் இது நிரந்தர தீர்வு அல்ல.இந்த மழைக் காலத்துக்கு முன்பே சாலை வசதிகள் மேம்பாட்டில் அரசு நிச்சயம் கவனம் செலுத்தியே ஆக வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.