ஹராரே: ஓய்வு நேரத்தில் மகளுடன் நேரம் செலவிடுவதால், அவள் என்னை நினைவில் வைத்து கொள்வாள் என இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் என பெயரெடுத்துள்ள மகேந்திர சிங் டோனி, தனது பள்ளி தோழி சாக்க்ஷியை திருமணம் செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற போது, டோனி-சாக்க்ஷி தம்பதிக்கு பெண் குழந்தைப் பிறந்தது. அந்த பிள்ளைக்கு ஷிவா என பெயரிடப்பட்டது.
தற்போது ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள டோனி தலைமையிலான இந்திய அணி மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இன்று நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என கைப்பற்றியது. தொடர்ந்து இருபது ஓவர் போட்டிகள் நடைபெறுகிறது.
இதற்கு பிறகு அக்டோபரில்தான் இந்திய அணி ஒரு நாள் போட்டியில் விளையாடவிருக்கிறது. டோனி டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அக்டோபர் மாதம்தான் இந்திய அணிக்காக விளையாடுவார்.
இந்நிலையில், இன்று ஹராரேவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் போது, நீண்ட ஓய்வு குறித்து டோனியிடம் கருத்துக் கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த டோனி, நீண்ட நாள்களுக்குப் பிறகு தற்போதுதான் எனக்கு நீண்ட ஓய்வு கிடைக்கவிருக்கிறது. இந்த ஓய்வு நேரத்தில் எனது மகளுடன் நேரம் செலவிடுவேன். இதன் மூலம் எனது மகள் அவரது அப்பாவை நினைவில் வைத்து கொள்வாள் என நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
ஜிம்பாப்வே தொடரில் இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என குறிப்பிட்ட டோனி, தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியினருக்கு நெருக்கடி அளித்தனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.