முகப்பு
தமிழ்நாடு

நெல்லித்தோப்புத் தொகுதியில் அதிமுகவுக்கு ஆதரவு ஏன்? ரங்கசாமி கொடுத்த ஷாக்

நெல்லித் தோப்புத் தொகுதியில் நாராயணசாமியை தோற்கடிக்கவே அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி கூறியுள்ளார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:36 PM
பகிர்:


புதுச்சேரி: நெல்லித் தோப்புத் தொகுதியில் நாராயணசாமியை தோற்கடிக்கவே அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஒம்சக்திசேகரை ஆதரிப்போம் என என்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக திமுக, விசிக மற்றும் பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து தேர்தல் பணியாற்றி வருகின்றன. அதிமுக வேட்பாளர் ஓம்சக்திசேகர் தங்கள் கட்சியினருடன் சேர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார்.

இடதுசாரிக் கட்சிகள் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என அறிவித்து விட்டன.

என்.ஆர். காங்கிரஸ், பாஜக உள்ளிட்டவை அறிவிக்காமல் இருந்தன. இந்நிலையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் ரங்கசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு ஆதரவு தர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு பின் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தலாகும். பொதுத் தேர்தல் நடைபெற்ற 5 மாதங்களில் ஒரு இடைத் தேர்தல் யாரால் திணிக்கப்பட்டது என்பதை மக்கள் அறிவார்கள்.

இது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாகும் செயலாகும். புதுச்சேரி மாநிலம், மக்கள் நலனுக்காக அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தர என்.ஆர். காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் கட்சி அதிகார துஷ்பிரயோகம், பணபலம், ஆள்பலத்தோடு முறைகேடுகள் புரிந்து வருகிறது.
இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. நாங்களும் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ய உள்ளோம். அதிமுக வேட்பாளர் ஓம்சக்திசேகருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வோம். இதற்காக என்.ஆர் காங்கிரஸ், அதிமுகவோடு கலந்து பேசி குழுக்கள் அமைக்கப்படும்.

நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் போன்ற ஜனநாயக கேலிக்கூத்து எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க ஒத்த எண்ணமுள்ள கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம்.
அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு ஆதரவாக ஓரே நோக்கம் கொண்ட கட்சிகள் அனைத்தும் இணைந்து செயல்பட்டு அவரை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்றார் ரங்கசாமி. பொதுச் செயலாளர் வெ.பாலன், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.