திருவெறும்பூரில் அதிர்ச்சி: தந்தை உள்பட 8 பேரைக் கொன்று புதைத்த இளைஞர்
திருவெறும்பூரில் கடந்த 2 ஆண்டுகளில் தந்தை உள்பட 8 பேரைக் கொன்று புதைத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். இதனால், அங்கு பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
திருச்சி: திருவெறும்பூரில் கடந்த 2 ஆண்டுகளில் தந்தை உள்பட 8 பேரைக் கொன்று புதைத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். இதனால், அங்கு பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
திருச்சி, திருவெறும்பூர் அருகேயுள்ள கிருஷ்ணாசமுத்திரம் ஊரைச் சேர்ந்தவர் தங்கதுரை. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் சென்றுள்ளார். இதுதொடர்பாக உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சப்பாணி (35) என்பவர் தங்கதுரையிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து, சப்பாணியை பிடித்து போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தங்கதுரையை கொலை செய்து ஊர் ஒத்துக்குப்புறத்தில் புதைத்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து சப்பானியிடன் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தங்கதுரையை தவிர மேலும் 7 பேரைக் கொலை செய்து அதே பகுதியில் புதைத்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார். பின்னர், போலீசார் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 7 பேரைக் கொன்று புதைத்த இடத்தைத் தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் அளித்த உத்தரவிட்டது.
திருவெறும்பூர் வருவாய்துறை அதிகாரி ரங்கராஜ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலைசெல்வன் உள்ளிட்ட குழுவினர் இனைந்து கிருஷ்ணாசமுத்திரம் பகுதியில் குழு அமைத்து உடலைத் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். இதில், சத்திநாதன், துரையூரைச் சேர்ந்த குமரேசன் ஆகியோரின் உடலைத் தோண்டி எடுத்தனர். உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, இறந்தவர்களின் உறவினர்கள் உடலை அடையாளம் காட்டினர். மேலும், இவர் கொலை செய்து புதைத்த ஐந்து பேரின் உடலைத் தோண்டி எடுக்கும் பணி நாளை மற்றும் நாளை மறுநாள் நடத்தப்பட உள்ளது.
இவர், மனநிலை சரியில்லாதவர் என்றும், இவரின் நடவடிக்கை சரியில்லா காரணத்தால் இவரின் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. கடந்த இரண்டு வருடமாகவே அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் தான் வேலை வாங்கித் தருவதாகவும், மந்திர தாயத்து கொடுப்பதாகவும் இதனால் தங்களின் வாழ்வு வளம் பெறும் என்றும் ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி பணம், நகைகளை பறித்துக்கொண்டு அவரைக் கொன்றுவிடுவாராம். மேலும், இவர் கொலை செய்த 8 பேரில் தனது தந்தையும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் இவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திருவெறும்பூரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.