புதுவை அருகே சுங்கச்சாவடி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
ஊதிய உயர்வு, போனஸ் கோரி புதுச்சேரி அருகே மொரட்டாண்டி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி ஊழியர்கள்....
புதுச்சேரி: ஊதிய உயர்வு, போனஸ் கோரி புதுச்சேரி அருகே மொரட்டாண்டி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி ஊழியர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கும் பணி பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி - திண்டிவனம் இடையில் நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி கடந்த 2007-ம் ஆண்டு துவங்கியது. 39 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.273.6 கோடி செலவில் சாலை அமைக்கும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டது.
இச்சாலையை பயன்படுத்தும் வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூலிப்பதற்காக மொரட்டாண்டி கிராமத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இதில் பயணிக்கும் கார், ஜீப், சரக்கு வாகனங்கள், லாரி, பஸ்கள், பெரிய லாரிகள் உள்ளிட்டவற்றுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இப்பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இங்கு மொத்தம் 70 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு 2 ஆண்டுகளாக ஊதிய உயர்வு மற்றும் போனஸ் தர வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டனர்.
50-க்கு மேற்பட்ட ஊழியர்கள் இதில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி-திண்டிவனம் 4 வழிச் சாலை வழியாக செல்லும் வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க ஆள்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றன.