முகப்பு
தமிழ்நாடு

அய்யாக்கண்ணுக்கு இஸ்லாமிய பங்கரவாதிகளுடன் தொடர்பு: எச். ராஜா குற்றச்சாட்டு

தில்லியில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணுவுக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதால் அவரை கைது செய்து

Updated On : 30 ஏப்ரல், 2017 at 3:54 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:54 PM

தூத்துக்குடி: தில்லியில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணுவுக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதால் அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் எச். ராஜா.
 தூத்துக்குடியில் நேற்று சனிக்கிழமை செய்தியாளர்களிடம்  அவர் கூறியதாவது:
 தமிழகத்தில் லோக் ஆயுக்த கொண்டு வர வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறி வருவது வேடிக்கையாக உள்ளது. அவர் துணை முதல்வராகவும், அவரது தந்தை கருணாநிதி முதல்வராகவும் இருந்தபோது லோக் ஆயுக்த கொண்டு வராமல் அவர்களது கைகளை கட்டியது யார் என்பதை தெரிவிக்க வேண்டும்.

ஊழல் புரிந்து கொண்டு ஊழலை எதிர்ப்பது போன்ற திமுகவின் வேஷத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். அலைக்கற்றை வழக்கில் ஜூலை 15 ஆம் தேதி தீர்ப்புக்கு பிறகு திமுகவைச் சேர்ந்த இருவர் சிறை செல்வது நிச்சயம். விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறிக் கொள்ளும் திமுக கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளதால் மத்திய அரசை விமர்சிக்கும் தகுதி திமுகவுக்கு கிடையாது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு இல்லத்தில் இருந்து ஆவணங்கள் திருட முயற்சி நடைபெற்றுள்ளது. அங்கு கொலை செய்யப்பட்ட காவலாளி குடும்பத்துக்கு முதல்வர் ரூ. 25 லட்சம் வழங்குவதோடு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்.

Advertisement

பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கீழடி அகழ்வாராய்ச்சி பணியை பார்வையிட வந்த மத்திய அமைச்சர்களை சிலர் முற்றுகையிட்டு போராடுவது கண்டிக்கத்தக்கது. அவர்களை முன்பே கைது செய்தாக காவல்துறைக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அமைச்சர்கள் தமிழகம் வரும்போது உரிய பாதுகாப்பு அளிக்க முடியாது என முதல்வரும், காவல் துறை தலைவரும் தெரிவித்தால் உரிய பாதுகாப்பு அளிக்க பாஜக தயாராக உள்ளது. தமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தொட்டிலாக உள்ளது.

தில்லியில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு குழுவினருக்கு இஸ்லாமிய பயங்ரவாதகளுடன் தொடர்பு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு உரிய விசாரணை மேற்கொண்டு அய்யாக்கண்ணுவையும், ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்த ஷேக் உசேனையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.