முதல்வரின் ராஜிநாமாவைக் கோராதது ஏன்? கமல் கேள்வி!
தமிழகத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்தும் முதலமைச்சரின் ராஜிநாமாவை யாரும் கோராதது ஏன் என்று கமல் கேள்வி எழுப்பியுள்ளார்...
தமிழகத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்தும் முதலமைச்சரின் ராஜிநாமாவை யாரும் கோராதது ஏன் என்று கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது நற்பணி மன்றங்களைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசின் ஊழல்கள் குறித்து அமைச்சர்களுக்கு விவரங்களை அனுப்ப வேண்டும் என்று என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. கமல் குறித்து தமிழக அமைச்சர்களும் பல்வேறு விமரிசனங்களைக் கூறிவருகிறார்கள்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த சம்பவத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி கமல் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
ஒரு மாநிலத்தில் ஊழல், பெரும் விபத்து போன்றவற்றுக்காக மாநில முதலமைச்சர் ராஜிநாமா செய்யவேண்டும் என்றால் தமிழகத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்தும் முதலமைச்சரின் ராஜிநாமாவை யாரும் கோராதது ஏன்?
எனது இலக்கு சிறப்பான தமிழகம் தான். எனது குரலுக்கு வலு சேர்க்க யாருக்குத் துணிச்சல் உள்ளது? திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எனக்குக் கருவியாக உதவவேண்டும். கருவிகள் சரியில்லை என்றால் வேறு ஒன்றைத் தேடுங்கள்.
ஊழலில் இருந்து நாம் சுதந்தரம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்தரப் போராட்டத்துக்குச் சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும். வெல்வோம் என்று கூறியுள்ளார்.